மும்பை: என்ன இது ஒரே ஆச்சரியமாக இருக்கிறது, என்று முதலீட்டாளர்கள் எல்லாருமே மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
காரணம் இருக்கு பாஸ். அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் எங்கே போர் வெடிக்குமோ? பொருளாதாரம் எப்படி எல்லாம் சீரழியுமோ? என்றெல்லாம் பல பொருளாதார வல்லுனர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், நிலைமை தலைகீழாக மாறி விட்டால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது?
உண்மைதான்.. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இந்தியாவில் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி ஏற்றம் கண்டுள்ளது.
அமெரிக்கா பின்வாங்கல்
இதற்கு முக்கியமான காரணம், ஈரானுக்கு எதிராக அடுத்தகட்ட தாக்குதலை நடத்தாமல் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பின் வாங்கியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத் தளம் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய நிலையில், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் அதில் இருந்து பின்வாங்கி தற்போது ஈரான் மீது பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் உலகமே நிம்மதி பெருமூச்சை விட்டுள்ளது.
கச்சா எண்ணெய்
மற்றொரு மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால், கச்சா எண்ணெயின் விலை என்பது சுமார் 4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்படுவதற்கு முன்பாக கச்சா எண்ணெய் எந்த விலையில் விற்கப்பட்டதோ, அதை விடவும் குறைவான விலைக்கு 65.44 அமெரிக்க டாலராக கச்சா எண்ணெய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி
டிசம்பர் மாத இரண்டாவது வாரத்திலிருந்து கணக்கில் கொண்டால், இது மிக குறைந்த விலை ஆகும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி நம்பிக் கொண்டு இருக்கிறது. எனவே, இந்திய பங்குச்சந்தைகளில் இதன் தாக்கம் எதிரொலித்து உற்சாகமான சூழ்நிலை நிலவுகிறது.
ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று உயர்வை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக 23 பைசாக்கள் உயர்வுடன் 71.47 என்ற அளவில் உள்ளது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் இறக்குமதி ஆகும் செலவும் குறையும். இதனால், நிதிப்பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் வரும். இதையெல்லாம் வைத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுதான் பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.