கனவில் கூட நினைத்திருப்போமா என்று தெரியவில்லை, கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு சரியும் என்று. பலரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இப்படி 21 வருடத்தில் இல்லாத அளவுக்கு விலை வீழ்ச்சி காணும் என்று.
உலகளவில் பரவி வரும் கொரோனாவினால் நடந்த ஒரு நல்ல விஷயம் என்றால் அது இது தான். அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது மிக நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இது பெரும் சவாலாகத் தான் இருக்கும் எனலாம்.
ஏன் சொல்லப்போனால் இதே போக்கில் போனால் திவால் நிலைக்கு சென்றாலும் சொல்வதற்கில்லை. ஏனெனில் தங்களின் முழு நேர வர்த்தகமும், முழு வருமான ஆதாரமாகவும் உள்ள எண்ணெய் விற்பனையில் துண்டு விழும்போது பிரச்சனை ஏற்படத்தானே செய்யும்.
தேவை சரிவு
கொடிய கொரோனா நோயால் பல உலக நாடுகள் ஸ்தம்பித்து போயுள்ளன என்றால் அது மிகையல்ல. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத வண்ணம் பல முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் உலகளவில் பொருளாதாரம், வர்த்தகம் கடும் பாதிப்படைந்துள்ளன. இதற்கிடையில் உலகளவில் எண்ணெய் தேவையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
எண்ணெய் வைக்க இடமில்லை
அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் கொரோனா தன்னுடைய கோர முகத்தினை காட்டி வருகின்றது. இதனால் அங்கு பல ஆயிரம் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இதனால் அங்கும் தேவை குறைந்து வருகிறது. எனினும் தேவை குறைந்த நிலையிலும் கூட, உற்பத்தி அதிகரிப்பால், கச்சா எண்ணெய் வைக்க கூட இடமில்லாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை 5.75% வீழ்ச்சி கண்டு, பேரலுக்கு 23.62 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 2.49% வீழ்ச்சி கண்டு 27.38 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக பேரலுக்கு 17 டாலர்கள் வரை சென்ற கச்சா எண்ணெய் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தேவை எவ்வளவு குறையும்
கொரோனா வைரஸினால் தேவை குறைந்து வரும் நிலையில், 25 மில்லியன் முதல் 30 மில்லியன் பேரல்கள் வரை குறையலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் உலகளாவிய சந்தையில் எவ்வளவு தேவை குறையலாம் என்ற தெளிவான அறிக்கையை பெற வேண்டும். ஏனெனில் வரவிருக்கும் உற்பத்தி குறைப்பானது போதுமானதாக இல்லை. இதனால் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
ஏற்றுமதி வீழ்ச்சி
ஆக இந்த விலை சரிவானது எண்ணெய் தொழில் முழுவதும் எதிரொலிக்கிறது. கச்சா எண்ணெய் ஆய்வாளர்கள் கடந்த வாரம் 13% ஏற்றுமதியை மூடி விட்டதாக கூறியுள்ளனர். ஏனெனில் உலகளாவிய கச்சாவின் வீக்கம் கடுமையான செலவுக் குறைப்பு மற்றும் உற்பத்தியும் நிறுத்தி வைக்கபப்ட்டுள்ளது.
எண்ணெய் இருப்பு அதிகரிப்பு
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கச்சா எண்ணெய் இருப்பானது அமெரிக்காவில் 50% அதிகரித்துள்ளது. இதனால் அங்கு இனி வரும் காலங்களில் சேமிப்பு வசதிகள் குறையலாம் என்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கி குழு லிமிடெட் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படி இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் தானே இதன் பலனை உடனே அடைய முடியும். ஆனால் இந்தியாவில் தற்போது அப்படி ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை இழப்பு
ஏற்கனவே பலத்த சரிவில் உள்ள பல எண்ணெய் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் பல கச்சா எண்ணெய் நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் இன்னும் பல நிறுவனங்கள் திவாலாக வாய்ப்புள்ளதால் பலர் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.