அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே கவனித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாகத் தங்களது முதலீட்டைச் செய்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அதிபர் தேர்தல் எதிரொலியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு முதலீடுகளைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
பொதுவாக அமெரிக்கத் தேர்தலின் போது அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும், குறிப்பாக இந்தத் தேர்தலில் கொரோனா காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான உயர்வு ஏற்படும்.
நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், நவம்பர் 2ஆம் தேதி கச்சா எண்ணெய் விலையில் 3 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் சந்தையில் முதலீடுகள் குறைந்து பல வாரங்களாக மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வரும் நிலையில் அமெரிக்கத் தேர்தலுக்கு ஒரு நாள் முன் கச்சா எண்ணெய் விலையில் 3 சதவீதம் உயர்வடைந்துள்ளது முதலீட்டுச் சந்தையில் பல விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் சந்தை
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது, அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது, இந்தியாவில் இன்னும் பெட்ரோல் டீசல் பயன்பாடு இயல்பு நிலைக்கு அடையவில்லை..
இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவையும், பயன்பாடும் அதிகளவில் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு கச்சா எண்ணெய் விலையில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.03 டாலர் அதாவது 2.7 சதவீதம் வரையில் அதிகரித்து 38.97 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 1.02 டாலர் அதிகரித்து 2.9 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 36.81 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும், பிரென்ட் மற்றும் WTI கச்சா எண்ணெய் விலை உயர்வுடனே காணப்படுகிறது.
பங்குச்சந்தை
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்த முறை கண்டிப்பாகப் பங்குச்சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கும் எனவும், இந்தப் பாதிப்பில் இருந்து அடுத்த சில வாரங்களுக்கு மீண்டு வர முடியாது என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளக் கச்சா எண்ணெய் சந்தையைத் தேர்வு செய்துள்ளனர்.
உற்பத்தி
OPEC அமைப்பு எடுத்துள்ள முடிவுகளின் படிக் கச்சா எண்ணெய் உற்பத்தியை 7.7 பில்லியன் பேரல் வரை உற்பத்தி செய்ய அக்டோபர் மாதம் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை மற்றும் பயன்பாடு கொரோனா காரணமாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி நடக்க இருக்கும் OPEC கூட்டமைப்பின் கூட்டத்தில் உற்பத்தி மேலும் குறைக்க முடிவு செய்து கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளது.