பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனத்தின் மீது பொதுமக்களின் பார்வை விழுந்துள்ளதை அடுத்து இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
அதே போல் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
எலக்ட்ரிக் வாகனங்கள்
மத்திய மற்றும் மாநில அரசுகளும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றன. அரசின் இந்த சலுகைகளை பயன்படுத்துவதற்காக ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்கனவே தொடங்கி உள்ளன என்பதும் இன்னும் சில நிறுவனங்கள் இந்தியாவில் விரைவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்க உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒகினாவா
இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிகமாக முதலீடு செய்யவும் திட்டமிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒகினாவா நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
10 லட்சம் வாகனங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரோலி என்ற பகுதியில் 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இங்கு அமைக்கப்படும் புதிய ஆலையில் ரூ.500 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், ஆண்டுக்கு 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒகினாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2023-ம் ஆண்டுக்குள் இந்த ஆலை செயல்பட தொடங்கும் என்றும் ஒகினாவா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது ஆலை
ஒகினாவா நிறுவனத்துக்கு ஏற்கனவே ராஜஸ்தானில் இரண்டு ஆலைகள் இருக்கும் நிலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் ஆலை மூன்றாவது ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
ராஜஸ்தான் கரோலி பகுதியில் தொடங்கப்படும் புதிய ஆலையை செயல்பாட்டுக்கு வந்தால் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஒகினாவா நிறுவனம் அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை
இதுகுறித்து ஒகினாவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜிதேந்தர் ஷர்மா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் இந்தியா தற்போது முன்னேறி வருகிறது என்றும், இந்தத் துறையில் எங்களுக்கு பிரச்சனைகள் அதிகம் இருந்தாலும் அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்
ராஜஸ்தானில் புதிதாக அமைக்கப்படும் ஆலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இருக்கும் என்றும் இதன் மூலம் இந்திய வாகன சந்தையில் மட்டுமன்றி உலக எலக்ட்ரிக் வாகன சந்தையிலும் எங்களால் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைப்பு
மேலும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை காக்கும் வகையில் மோட்டார்கள், கன்ட்ரோலர்கள், பேட்டரி பேக்குகள் மற்றும் பிற மின் பாகங்கள் ஆகியவற்றிலும் கவனத்தை செலுத்தி வருவதாக ஜிதேந்தர் ஷர்மா அவர்கள் கூறியுள்ளார்.