நீங்கள் அடிக்கடி ஓலா, உபர் சேவைகளைப் பயன்படுத்துபவராக இருந்தால் ஜனவரி 1 முதல் அதிகக் கட்டணத்தைத் செலுத்தத் தயாராகுங்கள். ஆம் வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைன் தளமாக ஓலா உபர் மூலம் ஆட்டோ புக்கிங் செய்யும் போது 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் தளத்தில் புக் செய்யப்படும் கார்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு இருந்த வேளையில் ஆட்டோ-க்களுக்குக் கொடுக்கப்பட்டு இருந்த சலுகையை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறை ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் இனி ஆன்லைனில் புக் செய்யப்படும் ஆட்டோ கட்டணத்திற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை ஜனவரி 1ஆம் தேதி முதல் கொடுக்க வேண்டும்.
ஆட்டோ சேவை
இதுநாள் வரையில் ஆட்டோ சேவைக்கு எவ்விதமான வரியும் இல்லாமல் இருந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் தற்போது ஆன்லைன் ஆட்டோ சேவைக்கு மட்டும் 5 சதவீத வரியை அறிவித்துள்ளது. ஆப்லைன் சேவை அதாவது ஆன்லைன் புக்கிங் இல்லாத ஆட்டோ சேவைக்கு எவ்விதமான வரியும் இல்லை.
புதிய வரி
இந்தப் புதிய வரி மாற்றம் ஆன்லைன் சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக ஆட்டோக்களை இயக்கும் நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறைவான கட்டணம்
பொதுவாக மக்கள் ஆன்லைன் தளத்தில் கார்களுக்குப் பதிலாக ஆட்டோ சேவையைத் தேர்வு செய்ய முதலும் முக்கியக் காரணம் குறைவான கட்டணம் என்ற ஒன்று மட்டுமே. தற்போது இந்தக் கட்டணம் 5 சதவீத ஜிஎஸ்டி வரி மூலம் அதிகரிக்கும் போது இது வாடிக்கையாளர்களை மட்டும் அல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களையும் பாதிக்கும்.
ஆட்டோ புக்கிங் வர்த்தகம்
இந்த வரி ஆன்லைன் தளத்தில் ஆட்டோ புக்கிங் வர்த்தகத்தைக் கட்டாயம் பாதிக்கும். ஆனால் இந்த வரி சுமையை நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கட்டணத்தில் எவ்விதமான உயர்வும் இருக்காது. இதேபோல் இந்த வரி உயர்வால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆன்லைன் உணவு சேவை
இதேபோல் மத்திய அரசு ஆன்லைன் உணவு சேவையிலும் கூடுதலான வரியை விதித்துள்ளது. இப்படி டிஜிட்டல் வர்த்தகத்தைத் தொடர்ந்து குறிவைத்து வரி விதிக்கும் பட்சத்தில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகச் சந்தை மூலம் கூடுதல் வருமானம் மட்டும் அல்லாமல் ஒழுங்கு முறைப்படுத்த முயற்சி செய்கிறது.