இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளின் முக்கியத் தேவையாக இருக்கும் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் இலவசமாக வழங்க உள்ளது.
ஓலா செயலியின் வாடிக்கையாளர்களில் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களிடம் சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பெற்றுக் கொண்டு இலவசமாக ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஓலா செயலி
ஓலா செயலி வாடிக்கையாளர் அதாவது ஆப்-ஐ பயன்படுத்துவோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் தேவைப்படுமாயின், அவர்களிடம் சில குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே பெற்றுக்கொண்டு, தகவல்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்-ஐ வீட்டு வாசலிலேயே டெலிவரி செய்ய உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.
ஓலா பவுண்டேஷன் - கிவ் இந்தியா கூட்டணி
இதற்காக ஓலா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஓலா பவுண்டேஷன் கிவ் இந்தியா உடன் கூட்டணி சேர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் ஓலா ஆப் வாயிலாகவே அளிக்க முடிவு செய்துள்ளது.
முற்றிலும் இலவசம்
ஓலா நிறுவனத்திடம் இருந்து ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் பெறும் போது எவ்விதமான கட்டணமும் பெறுவது இல்லை, குறிப்பாகப் போக்குவரத்துக் கட்டணம் கூடப் பெறுவது இல்லை என விளக்கம் அளித்துள்ள ஓலா, நோயாளி குணமடைந்த உடன் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்-ஐ திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் ஆரம்பம்
இந்தச் சேவையை முதற்கட்டமாகக் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள பெங்களூரில் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள ஓலா, அடுத்த சில வாரத்தில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இச்சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
10000 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்
முதல் 500 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்-ஐ பெங்களூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ள ஓலா நிறுவனம் இந்தியா முழுவதும் கிவ்இந்தியா அமைப்பின் உதவியுடன் சுமார் 10000 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்-களை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.
உபர் மற்றும் ரேப்பிடோ
இதேபோல் நாட்டின் பிற ஆன்லைன் கார் டாக்ஸி மற்றும் பைக் டாக்ஸி நிறுவனங்களான உபர் மற்றும் ரேப்பிடோ கொரோனா தடுப்பு மருந்து போட்டவர்களை வேக்சின் சென்டரில் இருந்து தங்களது வீட்டிற்கு இலவசமாக டிராப் செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.