பெங்களூரு: இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பினை இந்தியா சந்தித்து வருவதோடு, மக்களும் தங்களது அடிப்படை தேவையை கூட இழக்கும், நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, மக்களையும் பொருளாதாரத்தினையும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க PM cares fund- க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக கேட்டிருந்தார்.
500 வாகனங்களை அளித்த ஓலா
இதன் மூலம் பல தொழிலதிபர்கள், பிரபலங்கள், தனி நபர்கள் என பலரும் தங்களால் முடிந்ததை வாரி வழங்கி வருகின்றனர். இதையடுத்து ஓலா நிறுவனம் 500 வாகனங்களை அளித்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் சி என் நாரயணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாகனங்கள் டாக்டர்களை அழைத்து செல்வதற்கும், பிற கோவிட் -19 தொடர்பான சேவைகளுக்கும் 500 வாகனங்களை அரசுக்கு வழங்க ஓலா ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனுமதி இல்லை
மேலும் இது குறித்து ஓலாவின் இந்த நடவடிக்கை மிக பாராட்டத்தக்கது என்றும் அஸ்வத் நாராயண் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்துத் போராடுவதை நோக்கமாகக் கொண்ட பூட்டுதலை அரசு அறிவித்தது. இதனால் உபெர், ஓலா, மற்றும் பிற வாடகை டாக்சிகள் பயணிகள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ அவசரங்களுக்கு உதவுவதை தவிர மற்ற தேவைகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
இதனால் தற்போது டாக்ஸி சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் இந்த தடை காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதால், ஓட்டுநர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஓட்டுநர்களுக்கு உதவ ஓலா நிறுவனம் முன்வந்துள்ளது.
நிதி திரட்ட முடிவு
ஓலா செயலி சார்பாக 'டிரைவ் தி டிரைவர் ஃபண்ட்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிரவுட் ஃபண்டிங் வழிமுறையில் 50 கோடி ரூபாய் வரையில் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தனது பங்குக்கு, தனது ஓராண்டு ஊதியத்தை ஓட்டுநர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ஓட்டுனர்களுக்கு உதவ நிதி
இதுகுறித்து பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. என் சார்பாக அடுத்த ஆண்டுக்கான எனது சம்பளத்தைத் தருகிறேன். மற்ற ஊழியர்களும் நிறுவனமும் இணைந்து 20 கோடி ரூபாய் நிதியாக அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ உதவிகள்
இவ்வாறு திரட்டப்படும் நிதியைக் கொண்டு ஓலா ஓட்டுநர்கள் தங்களது, அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் ஓலா நிறுவனம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications