கொரோனா வைரஸ் வந்த பின் உலகப் பொருளாதாரமே தலைகீழ் மாற்றம் கண்டு வருகிறது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக பல கம்பெனிகளில், லே ஆஃப் பிரச்சனை தலையெடுத்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக, இந்தியாவின் முன்னனி ஸ்டார்ட் அப் கம்பெனிகளான ஒயோ (ஹோட்டல் துறை), ஸ்விக்கி (உணவு டெலிவரி), பேடிஎம் (நிதி சேவை), ஷேர் சாட் (சமூக வலைதளம்) என பல துறை சார்ந்த, பல கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை லே ஆஃப் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நாஸ்காம் கணிப்புப் படி, கொரானா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த லாக்டவுனால், இந்தியாவில் சுமார் 40 சதவிகித ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு இந்தியாவின் 70 சதவிகித ஸ்டார்ட் அப் கம்பெனிகளிடம் சுமாராக மூன்று மாதங்களுக்குத் தேவையான பணம் தான் கையில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. சரி மீண்டும் லே ஆஃப் பிரச்சனைக்கு வருவோம்.
தொடர்ந்து லே ஆஃப் செய்து கொண்டு இருக்கும் இந்தியாவின் டாப் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வரிசையில், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டாக்ஸி அக்ரிகேட்டார் நிறுவனமான ஓலாவும் இணைந்து இருக்கிறது.
ஓலா நிறுவனம் சுமார் 1,400 ஊழியர்களை இந்த கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட வியாபார நஷ்டத்தை காரணம் சொல்லி லே ஆஃப் செய்து இருக்கிறார்களாம்.
ஓலா இந்தியா கம்பெனியில், மொத்தமாக சுமார் நான்காயிரம் ஊழியர்கள் தான் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். ஆக மொத்த ஊழியர்களில் சுமாராக 35 சதவிகிதம் பேரை விட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஓலாவின் வருவாய், கடந்த கடந்த 2 மாதங்களில், சுமார் 95 சதவிகிதமும் சரிந்து இருக்கிறதாம்.
ஓலா நிறுவனத்தில், சாஃப்ட் பேங்க் (Soft Bank), டைகர் குளோபல் (Tiger Global), டென்சண்ட் (Tencent), ஸ்எட்வியூ கேப்பிட்டல் (Steadview Capital) போன்ற கம்பெனிகள் முதலீடு செய்து இருக்கிறார்கள். கடந்த செப்டம்பரில், ஓலா கம்பெனி ஃபண்டிங் திரட்டிய போது, ஓலாவின் மதிப்பு 6 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.