இந்தியாவில் புதிய மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் ஒன்றாக விளங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் பெரிய முதலீட்டுடன் களத்தில் இறங்கிய ஓலா தற்போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஓலா நிறுவனம் ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவையை அளித்து வந்த நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்களைக் கைப்பற்றி எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியது.
எல்லாம் சரியாகச் சென்று கொண்டு இருக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து மற்றும் இத்துறையில் முன்னணி இரு இரு சக்கர நிறுவனங்களின் வருகை ஆகியவை ஓலா-வை தடுமாறச் செய்துள்ளது.
இதன் விளைவு 500 ஊழியர்களை ஓலா நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஓலா நிறுவனம்
ஓலா நிறுவனம் 2022 துவங்கியதில் இருந்து பல பிரிவுகளில் இருந்து பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த காரணத்தால் பல உயர் அதிகாரிகள் வெறுப்பில் வெளியேறியது மறக்க முடியாது. இந்த நிலையில் ஓலா நிறுவனம் தற்போது இதுவரையில் மலைபோல் நம்பியிருந்த டெக் துறையில் கைவைத்துள்ளது.
500 டெக் ஊழியர்கள்
ஓலா நிர்வாகம் சுமார் 500 டெக் ஊழியர்களுக்குப் பிங்க் சிலிப் கொடுத்து வருகிறது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் ANI டெக்னாலஜிஸ் பிரிவில் இருக்கும் ஊழியர்களாகும். இந்த நிறுவனம் தான் ஓலா ஆப், ஆன்லைன் டாக்சி சேவை ஆகியவற்றை அளித்து வருகிறது, 2022 துவங்கியது முதல் செய்யப்பட்ட பணிநீக்கம் அனைத்தும் ஓலா எலக்ட்ரிக் பிரிவு ஊழியர்களாகும்.
ANI டெக்னாலஜிஸ்
ஆனால் இந்த முறை ஓலா தனது ஆஸ்தான நிறுவனமான ANI டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் கைவைத்துள்ளது, இந்த 500 ஊழியர்களின் திடீர் பணிநீக்கத்திற்குக் காரணம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஏற்பட்ட சரிவு தான் என கூறப்படுகிறது.
2000 பேர் பணிநீக்கம், வர்த்தகம் மூடல்
ஓலா நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் 2000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பழைய கார் விற்பனை வர்த்தகப் பிரிவான ஓலா கார்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் வர்த்தகப் பிரிவான ஓலா டேஷ் ஆகிய இரு பிரிவுகளையும் மொத்தமாக மூடியது.
30 உயர் அதிகாரிகள் ராஜினாமா
இது மட்டும் அல்லாமல் ஓலா எலக்ட்ரிக், ஓலா கார்ஸ், ஓலா டேஷ் துவங்கிய போது கூட்டம் கூட்டமாக வெளி நிறுவனத்தில் இருந்து ஓலா நிறுவனத்தில் சேர்ந்த உயர் அதிகாரிகள் 30 பேர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினர்.
ஓலா நிர்வாகம்
இதுகுறித்து ஓலா நிர்வாகம் கூறுகையில் தற்போது ஓலா நிர்வாகம் மென்பொருள் அல்லாமல் துறையில் அதிகக் கவனம் செலுத்துவதாக அறிவித்தார். மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் அடுத்த 18 மாதத்தில் இன்ஜினியரிங் பிரிவில் 5000 ஊழியர்களைச் சேர்க்கவும் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.