ஓலா நிறுவனத்தின் பிரம்மாண்ட தமிழக தொழிற்சாலை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், விரைவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஓலா நிறுவனம் அறிவித்த அறிக்கையின் படி, விரைவில் பணிகள் முடியலாம். ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தது.
பலத்த எதிபார்ப்புகளுக்கும் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பு
வரவிருக்கும் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது இன்னும் சற்று தாமதமாகலாம் என்ற நிலையே உருவாக்கியுள்ளது. எப்படியிருப்பினும் விரைவில் வெளியிடப்படலாம் என்பது மின்சார வாகன ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.
நல்ல எதிர்காலம் உண்டு
மேலும் தற்போது பெட்ரோல் விலையானது பல நகரங்களிலும் 100 ரூபாயினை எட்டியுள்ள நிலையில், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது எனலாம்.
பிரம்மாண்ட ஹைப்பர்சார்ஜர் திட்டம்
ஓலா இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இதற்காக பிரம்மாண்ட ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கினை அமைக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்தது. இந்த திட்டத்தினால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்ட உள்கட்டமைப்பு பணிகள்
இதற்கிடையில் ஓலாவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், முதல்கட்ட உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வெற்று நிலமாக இருந்த நிலத்தில் இருந்து, உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
என்ன வண்ணம்?
ஏற்கனவே தனது முந்தைய ட்விட்டர் பக்கத்தில் ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிடப்படும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே கறுப்பு நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் விரும்பும் வண்ணங்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எவ்வளவு முதலீடு?
ஓலா கடந்த ஆண்டே இதற்காக ஓலா 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்த நிலையில், ஆண்டுக்கு 2 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்காக தமிழகத்தில் ஓசூரில் ஆலை அமைத்து வரும் நிலையில், இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை கொடுக்க முடியும் என அறிவித்தது. இந்த 2 மில்லியன் யூனிட்கள் என்பது விரைவில் 10 மில்லியன் யூனிட்களாக விரிவுப்படுத்தப்படும்.
சார்ஜிங் பாயிண்ட்டுகள்
அதே போல ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதோடு, 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 100 நகரங்களில் 5,000 சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்தது.
இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங்
இந்த சார்ஜிங் பாயிண்ட்டுகள் வாடிக்கையாளார்கள் எளிதில் அடையும் விதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மால்கள், ஐடி பூங்காக்கள், அலுவலக கட்டிடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் என்றும் சமீபத்திய அறிக்கையில் ஓலா கூறியது. ஆக வாடிக்கையாளர்கள் சார்ஜிங் பற்றிய கவலை இல்லாமல் இதனை வாங்கலாம். ஓலாவின் இந்த எலெக்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை 18 நிமிடம் சார்ஜ் செய்தால் போதுமானது. இதன் மூலம் நீங்கள் 75 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் விரிவாக்கம்
தற்போதைக்கு இந்த சார்ஜிங் பாயிண்ட்டுகள் இரு சக்கர வாகனங்களுக்காக அமைக்கப்படும். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் 4 சக்கர வாகனங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் என அகர்வால் கூறியிருந்தார். தற்போது வரையிலும் இந்த வாகனத்தின் விலை நிலவரம் என்ன என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.