பலத்த எதிபார்ப்புகளுக்கும் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரவிருக்கும் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஸ்கூட்டர் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கினை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை
தற்போது வாடகை வாகன சேவை வணிகத்தில் கொடிகட்டி பறந்து வரும் ஒலா, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியிலும் களமிறங்க உள்ளது. இது குறித்து ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ஓலாவின் பிரம்மாண்ட தொழிற்சாலையும் ஓசூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இது உலகின் முன்னணி தொழில் சாலையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜூலையில் அறிமுகம்
இதற்கிடையில் தான் ஜூலை மாதத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது சார்ஜிங் பாயிண்ட்கள் தான். ஏனெனில் தூரம் செல்லும் போது சார்ஜிங் இல்லையெனில் எப்படி என்ற கேள்வி எழும். ஆனால் ஓலா உற்பத்தி தொழிற்சாலை மட்டும் அல்லாது அதற்கான சார்ஜிங் பாயிண்ட்களையும் பிரம்மாண்டமாக அமைக்க திட்டமிட்டுள்ளது.
லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்
ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதோடு மட்டும் அல்லாது 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில் முதல் ஆண்டில் 100 நகரங்களில் 5,000 சார்ஜிங் பாயிண்ட்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பாயிண்ட்கள் வாடிக்கையாளார்கள் எளிதில் அடையும் விதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மால்கள், ஐடி பூங்காக்கள், அலுவலக கட்டிடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வளவு நேரம் சார்ஜ்?
ஆக வாடிக்கையாளர்கள் சார்ஜிங் பற்றிய கவலை இல்லாமல் இதனை வாங்கலாம் என்கிறது ஓலா. அதோடு ஓலாவின் இந்த எலெக்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை 18 நிமிடம் சார்ஜ் செய்தால் போதுமானது. இதன் மூலம் நீங்கள் 75 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என்கிறது ஓலா. கடந்த ஆண்டே இதற்காக ஓலா 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்த நிலையில், ஆண்டுக்கு 2 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஆப் மூலம் கண்கானிக்கலாம்
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், விலையானது அதிகரித்து வரும் நிலையில், வரும் காலத்தில், மின்சார வாகனங்களின் பயன்பாடானது அதிகரிக்கும் என்ற நிலையில், ஓலா மின்சார வாகனங்களுக்கு தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இந்த ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்கள் தங்களது சார்ஜிங் பற்றிய விவரங்களை ஆப்பில் கண்கானித்துக் கொள்ள முடியும். அதோடு வீடுகளில் சார்ஜ் செய்ய வேறு எந்த கூடுதல் நிறுவலும் தேவையில்லை. வழக்கமான சார்ஜர்களிலேயே போட்டுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. உண்மையில் இது நல்ல விஷயம் தான். இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். சுற்றுசூழலுக்கும் நன்மையே. அண்டை நாடுகளில் ,மின்சார வாகனங்களின் பயன்பாடானது பெரும் அளவில் உள்ள நிலையில், இந்தியாவில் பெரியளவில் இல்லை. ஆக மின்சார வாகன துறையில் பெரும் புரட்சியை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.