கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, குறிப்பாக நிறுவனங்களில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, ஹைப்ரிட் மாடல், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகம், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும்.. இப்படி நிறுவனங்கள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஐடி, டெக் அல்லது புதிதாக உருவாகிய நிறுவனத்தில் தான் அதிகம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போ மற்ற நிறுவனங்கள்...?
மாற்றம் மட்டுமே மாறாதது
வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள இத்தகைய புதிய மாற்றங்களை நீண்ட காலமாக இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பல நிறுவனங்கள் உணர்ந்துள்ளது.
புதிய வேலைவாய்ப்பு முறை
இதன் படி இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் டெக் துறை அல்லாத நிறுவனங்களான சியாட், டாடா ஸ்டீல், ஐடிசி, மஹிந்திரா பைனான்ஸ், தெராமேக்ஸ், போர்ப்ஸ் மார்ஷெல் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு, 2-3 நாள் வொர்க் பர்ம் ஹோம், நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, எங்கு இருந்து வேண்டுமானாலும் பணியாற்றும் முறை work-from-anywhere (WFA) ஆகியவற்றை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளது.
ஹைப்ரிட் கலாச்சாரம்
மேலும் இந்த ஹைப்ரிட் கலாச்சாரத்தை இந்திய நிறுவனங்கள் டெக் பிரிவுகளுக்கு மட்டும் அல்லாமல் நிதி துறை, மனித வள பிரிவு, சட்ட பிரிவு, கணக்கியல் ஆகிய பிரிவுகளுக்கும் கொண்டு வந்துள்ளது கூடுதல் சிறப்பு.
ஊழியர்கள் வெளியேற்றம்
தற்போது டிஜிட்டல் சேவை நிறுவனங்களில், டெக் பிரிவுகளைத் தாண்டி பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும் நிலையில் பெரு நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. இதைக் கட்டுப்படுத்தவே பழைய நிறுவனங்களில் ஹைப்ரிட் மாடல் கொண்டு வரப்பட்டுள்ளது.
செலவுகள்
இதேபோல் இந்த ஹைப்ரிட் மாடல் மூலம் நிறுவனத்திற்குப் பல வகையில் செலவுகள் குறைகிறது என்பதால் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் இந்த ஹைப்ரிட் மாடலை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.