கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், கோலாகலமாகத் துவங்கியுள்ளது ஓலிம்பிக் போட்டிகள்.
இதைக் கொண்டாடும் வகையில் உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் கியூட்டான ஒரு டூடுல்-ஐ வெளியிட்டு அசத்தியுள்ளது. இந்த டூடுல் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்ற போதிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நாடு பல ஆண்டுக்கால திட்டமிடல் உடன் மிகப்பெரிய பொருட் செலவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் காரணத்தால் எப்படியாவது இந்தப் போட்டிகளை கொரோனா தொற்றுப் பாதிப்பு இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளிக்கிழமை தொடக்கவிழாவும், அனைத்து நாடுகளின் அணி வகுப்பும் சிறப்பாக நடந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பல்வேறு போட்டிகள் துவங்கப்பட்டது.
இந்நிலையில், பளுதூக்கும் போட்டியில், பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்று இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதேபோல் முதல் தங்கத்தைச் சீனா இன்று வென்றுள்ளது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் கியான் (Yang Qian) தங்கப் பதக்கம் வென்றார். இந்திய பல விளையாட்டுகளில் முன்னேறி வருவது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் போட்டிகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.