கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்கும் பல வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன், தற்போது நிலவி வரும் குறைவான கச்சா எண்ணெய் வர்த்தகம் குறைவான விலை காரணமாக அதிகளவிலான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு வருவாய் ஈட்டும் பல புதிய வழிகளையும், புதிய வர்த்தகம், புதிய முதலீடுகளைத் திட்டமிட்டு வரும் ஓமன் அரசு நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் 2022ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் வாழும் பணக்காரர்களின் வருமானத்தின் மீது வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
ஓமன் அரசின் இந்த முடிவை அந்நாட்டில் இருக்கும் பல பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் மறைமுகமாக எதிர்த்தாலும், பொருளாதார வல்லுனர்களும், அந்நாட்டு நிதியியல் துறையும் வரவேற்றுள்ளது.
ஓமன்
2014ஆம் ஆண்டு முதல் ஓமன் நாட்டின் பட்ஜெட்-ல் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014ல் அந்நாட்டு ஜிடிபி அளவில் -1.1 சதவீதம் அளவிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் பின்பு 2025ல் -15.9 சதவீதம், 2016ல் அதிகப்படியாக -21.3 சதவீதம், 2017ல் -14 சதவீதம், 2018ல் -7.9 சதவீதம், 2019ல் -7.1 சதவீதம், 2020ல் -18.1 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இலக்கு
இந்நிலையில் ஓமன் அரசு இனி வரும் காலத்தில் அரசு செலவுகளை அதிகளவில் குறைத்துக் கொண்டு, அதிக வருமானம் மற்றும் லாபத்தைத் தரும் முதலீடுகளை அதிகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் ஓமன் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அளவு 1.7 சதவீதம் அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரி வருமானம்
ஓமன் நாட்டின் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யார் மீது எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதையும், வருமான வரி அளவீடு குறித்து முடிவுகளை ஆலோசனை செய்து வருகிறது ஓமன் அரசு.
மேலும் வருமான வரி மூலம் கிடைக்கும் நிதியைச் சமுக வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள்
நீண்ட காலமாக ஓமன் வரியில்லா நாடாக இருந்த காரணத்தால் பல நிறுவனங்களும், ஊழியர்களும் ஓமன் நாட்டுக்கு வர உறுதுணையாக இருந்தது. இந்நிலையில் ஓமன் நிதி பற்றாக்குறைக்காக வரியை அறிமுகம் செய்தால் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவும் என்றும், இதனால் பல பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை ஓமன் இழக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கருத்து நிலவுகிறது.