இந்தியாவில் மீண்டும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
கொரோனா முதல் மற்றும் 2ஆம் அலையில் சரியமான பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் இல்லாமல் இயங்கிய காரணத்தால் பல முன்னணி தொழிற்சாலைகளில் கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்துத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உருவானது மறக்க முடியாது. இதேபோன்ற நிலையை மீண்டும் உருவாக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு மனமில்லை.
உற்பத்தி நிறுவனங்கள்
இந்தியாவில் பல முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தொற்றுப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், தொடர்ந்து உற்பத்தி பணிகள் நடக்க வேண்டும் முடங்கக் கூடாது என்பதை உறுதி செய்யவும் முக்கியமான மாற்றங்களைத் தற்போது கொண்டு வந்துள்ளது. பல முன்னணி நிறுவனங்களும் தானாக முன் வந்து தனது உற்பத்தி அளவுகளைக் குறைத்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
இதன் மூலம் தொழிற்சாலைக்கு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்க முடியும், இதேவேளையில் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்க கூடாது என்பதற்காக உற்பத்தி ஷிப்ட் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது அல்லது ஷிப்ட் நேரத்தை மறுசீரமைப்புச் செய்து அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது.
உற்பத்தி மற்றும் விற்பனை
இதுமட்டும் அல்லாமல் உற்பத்தி இலக்குகள் குறைக்கப்படும் இதேவேளையில் விற்பனை இலக்குகளையும் குறைத்துள்ளது, அதாவது விற்பனை பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அதிகளவில் சந்தைக்குச் செல்வதைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
அதானி வில்மார், ஐடிசி, டாபர்
ஆனால் இதேவேளையில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் அதானி வில்மார், ஐடிசி, டாபர் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஊழியர்கள் மத்தியில் சமுக இடைவெளியை கடைப்பிடித்து உற்பத்தி மற்றும் இருப்பை அதிகரித்துள்ளது. இதன் மூலம் வர்த்தகச் சந்தையில் எவ்விதமான தட்டுப்பாடும் இருக்காது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று அதிகரித்துள்ள வேளையில் நாட்டின் சப்ளை செயின் பாதிக்கப்படும் இந்த வேளையில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கிடைக்கும் வகையில் உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
ஒமிக்ரான் எதிரொலி
இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை பெரு நகரங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள் முதல் கார் உற்பத்தி நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் தங்களது உற்பத்தி பணிகளை மறுசீரமைப்பு செய்துள்ளது.