நாம் பயன்படுத்தும் பல மொபைல்களுக்கு ஒரே சார்ஜர் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு சில மாடல்களுக்கு சில சார்ஜர் உபயோகப்படாது.
ஒருசில குறிப்பிட்ட மாடல்கள் மொபைல் போன்களுக்கு தனித்தன்மையாக சார்ஜர் இருந்து வருவதால் பொதுமக்கள் சிரமத்துடன் உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் போனை விற்றுவிட்டு வேறு மொபைல் போன் வாங்கினால் புதிதாக சார்ஜர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை அடுத்து அனைத்து மொபைல்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரே சார்ஜர்
அனைத்து வகை மொபைல் போன்கள் மற்றும் கையடக்க மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜரை ஏற்றுக் கொள்வதற்கான தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய தொழில்துறை தொழிலதிபர்களுடன் மத்திய அரசு நேற்று ஒரு கூட்டத்தை நடத்தியது.
கூட்டம்
நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித்குமார் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொபைல்போன்கள், மடிக்கணிணிகள் உள்பட சிறிய மின்னணு சாதனங்களின் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். துறை சார்ந்த சங்கங்கள், தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஐரோப்பா- அமெரிக்கா
இந்த கூட்டத்தில் இந்தியாவில் அனைத்து வகை மொபைல்கள், லேப்டாப்களுக்கு ஒரேவகை சார்ஜரை ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதாக மாற்ற வேண்டுமென தொழிலதிபர்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இந்த விதிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டது.
மின்னணு கழிவுகள்
ஒவ்வொரு மொபைல் போன் வாங்கும் போதும் சார்ஜர் தனியாக வாங்க வேண்டும் என்றால் நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவாகிறது என்றும், மின்னணு கழிவுகளும் அதிகரிக்கும் என்பதால் இதனை தடுப்பதற்கு பொதுவான சார்ஜர் அவசியம் என நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் தொழிலதிபர்களிடம் வலியுறுத்தினார்.
USB-C
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகை சிறிய மின்னணு சாதனங்களுக்கு USB-C வகை போர்ட்டர் என்ற பொதுவான சார்ஜர் ஏற்றுக்கொள்ளும் கொள்கையை அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் இதை நடைமுறைப்படுத்த கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் அனைத்து வகை மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகை சார்ஜர் பயன்படுத்தப்படும் நிலைமை வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.