சமீப காலமாகவே சைபர் தாக்குதல் மூலம் பல பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டேட்டா திருட்டு, ஹேக்கிங், செல்போன் ஹேக் செய்தல் என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
இதற்கிடையில் சமீபத்திய ஆய்வொன்றில் இந்தியாவில் 11% பேர் தங்களது மொபைல் போன்களில், நிதி ரீதியிலான முக்கிய தகவல்களை சேமித்து வைத்துள்ளனராம்.
இதனால் என்னென்ன பாதிப்பு? இதனை தவிர்க்க என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.
3ல் ஒருவர் செய்யும் தவறு இது தான்
மேலும் இதில் கவலை தரும் விஷயம் என்னவெனில் மூன்றில் ஒரு இந்தியர், வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர்கள், ஆதார் கார்டு, பான் எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை தங்களது மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர்கள், மெயில்களில் சேமிக்கின்றனர் என லோக்கல் சர்கிள்ஸ் தளத்தின் ஆய்வு கூறுகின்றது.
மொபைலில் தரவுகள்
இதே 11% பேர் தங்களது தனிப்பட்ட நிதி குறித்தான முக்கிய விவரங்களை, தங்களது தொலைபேசியின் தொடர்பு பட்டியலில் வைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சாதாரணமாக நீங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் சார்ந்த ஒரு ஆப்பினை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்தாலே, உங்களது மொபைலில் உள்ள தொடர்பு பட்டியலில் உள்ள தரவுகளின் அணுகலை கேட்கிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், இது மிக ஆபத்தான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தரவுகளுக்கும் நீங்கள் உங்களை அறியாமல் அனுமதி கொடுக்கின்றனர்.
பாஸ்வேர்டுகள் ஷேரிங்
மேலும் கிட்டதட்ட மூன்றில் ஒருவர் தங்களது முக்கிய பாஸ்வேர்டுகளை, தங்களது குடும்பத்தில் உள்ள 1 அல்லது பலரிடம் ஷேர் செய்வதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றது.
Per Unisys Security Index 2020 அறிக்கை, ஒரு தனி நபரின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு அங்கீகரிக்கப்படாத அணுகல் மூலம் மோசடி நடைபெறுவது, பயனர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளதாக கூறியுள்ளது.
எத்தனை பேரிடம் ஆய்வு?
மேற்கண்ட இந்த ஆய்வினை LocalCircles 24,000 பேரிடம், நாடு முழுவதும் 393 மாவட்டங்களில் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் 63% ஆண்கள். 37% பேர் பெண்கள். இதில் மொத்தம் பதிலளித்தவர்களில் 45% பேர் மெட்ரோ/டயர் 1 நகரங்களில் இருந்து பதிலளித்தவர்கள் ஆவர். 31% பேர் டயர் 2 நகரங்களில் இருந்தும், 24% பேர் டயர் 3 நகரங்களில் இருந்தும் பதிலளித்தவர்கள் ஆவர்.
யார் யார் எங்கு?
ஆய்வில் பதிலளித்தவர்களில் வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, சிவிவி, ஏடிஎம் பாஸ்வேர்டுகள், ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற முக்கிய விவரங்களை 7% பேர் தொலைப்பேசியிலும், 15% பேர் மெயில் அல்லது அவர்களது கணினியிலும், 11% பேர் மொபைல், ஈமெயில் அல்லது கணினியிலும் சேமித்து வைப்பதாக கூறியுள்ளனர்.
33% இப்படித் தான்
21% பேர் தங்களது நிதி ரிதீயிலான முக்கிய தகவல்கள் அனைத்தையும் நியாபகம் வைத்துள்ளதாகவும், 39% பேப்பர் வடிவத்திலும் வைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 7% பேர் எந்த கருத்தும் தெரிவிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர். ஆக மொத்தத்தில் 33% பேர் தங்களது முக்கிய ஆவணங்களை மொபைல் போன்கள், மெயில் அல்லது கணினியில் சேமித்து வைத்துள்ளனர்.
எச்சரிக்கையாக இருங்கள்
இன்றைய காலகட்டத்தில் சைபர் தாக்குதல் குறித்தான அச்சம் என்பது அதிகளவில் உள்ளது. ஆக நிதி ரீதியிலான விவரங்களை, ஆவணங்களை இப்படி சேமித்து வைப்பது என்பது மிக ஆபத்தான ஒரு விஷயம் கூட. ஆக உங்களது தகவல்கள் திருட்டு போவதற்கு நீங்களே முக்கிய காரணமாக அமையலாம். ஆக இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முன் கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.