நாட்டில் டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் தேசிய பொது பயண அட்டை சேவையை திங்கட்கிழமையன்று பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த பயண அட்டையைக் கொண்டு விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.
மொபைலிட்டி கார்டு உபயோகம்
அது மட்டும் அல்ல இந்த தேசிய பயண அட்டை மூலம் பிற மார்க்க மெட்ரோ ரயிலிலும், பஸ்களிலும் பயணிக்கலாம். மேலும் சுங்கச்சாவடி- வாகன நிறுத்துமிட கட்டணம் மற்றும் சில்லரை வர்த்தக்கத்துக்கும் பொது பயண அட்டையைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் பெற முடியும்?
இந்த NCMC கார்டினை கடந்த 18 மாதங்களாக 23 வங்கிகள் வழங்கி வருகின்றன. எனினும் நாடு முழுவதும் இந்த சேவையினை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சேவையானது 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
என்ன பயன்பாடு
நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டு, அதாவது ஒரு நாடு, ஒரு மொபைலிட்டி கார்டு திட்டமானது மக்களின் நேரத்தினை மிச்சப்படுத்துவதோடு, அலைச்சலையும் குறைக்கிறது. இதன் மூலம் பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் பெற முடியும். இதனை டெபிட் கார்டாகவும் பயன்படுத்த முடியும். போக்குவரத்துக்கான மக்களின் செலவுகள் குறையும்.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்
இதற்கிடையில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இது மேற்கு ஜனக்புரி- பொட்டானிக்கல் கார்டன் வரை சுமார் 38 கி.மீ. தூரத்துக்கு ஓட்டுநர் இன்றி, இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது நல்ல திட்டம் தான்
இந்த மொபைலிட்டி கார்டு மூலம், ஷாப்பிங், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சில பரிவர்த்தனைகளுக்கும் இதனை பயன்படுத்த முடியும். 2022ல் டெல்லி முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டு என்சிஎம்சி மூலம் வழங்கப்படும். இது ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டியாகும். உண்மையில் இது பயனுள்ள ஒரு திட்டம் தான். ஏனெனில் இனி இதற்கென தனியாக மக்கள் நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.