ஓஎன்ஜிசி ஒரு இந்திய பொதுத்துறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமாகும்.
இதன் ஒரு கிளையாக கொலம்பியாவில் ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இது வெளிநாடுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
இதன் படி கொலம்பியா நாட்டிலும் ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் என்ற பெயரில் (ஓ.வி.எல்) முதலீடு செய்துள்ளது. லத்தின் அமெரிக்காவில் இயங்கும் ஜியோபார்க் நிறுவனம் 30%, ஓவிஎல் 70% பங்குகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
புதிய கிணறு
கொலம்பியாவில் லனோஸ் படுகையில் உள்ள இண்டிகோ -2 என்ற கிணறில் எண்ணெய் கண்டுபிடிப்புக்காக துளையிடும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒவிஎல் கண்டறிந்த 4வது எண்ணெய் கிணறாகும். இந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1992 சதுர கிலோமீட்டர் பிளாக்கில் மேலும் புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டி எண்ணெயைக் கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3டி தரவுகளைப் பயன்படுத்தி இடம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓஎன்ஜிசி-யின் பங்கு விலை
இந்த அறிக்கைகளுக்கு மத்தியில் தான் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றம் கண்டுள்ளது.
மதியம் 1.55க்கு ஓஎன்ஜிசி பங்கின் விலையானது 2.3% அதிகரித்து 91.90 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. இதே நேரம் சென்செக்ஸ் 0.5% ஏற்றம் கண்டு 45,289.89 ஆக வர்த்தகமாகியுள்ளது.
நிகரலாபம் எவ்வளவு?
ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது செப்டம்பர் காலாண்டில் 55% நிகரலாபம் குறைந்து, 2,878 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கொரோனா வைரஸ் காரணமாக அதன் எண்ணெய் மற்றும் கேஸ் வர்த்தகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம் மோசமாக பாதிகப்பட்டுள்ளது. எனினும் இந்த புதிய எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பால், அடுத்து வரும் காலாண்டுகளில் இதன் லாபம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவால் மோசமான செயல்பாடு
இந்நிறுவனத்தின் செயல்பாடு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், அதன் வருவாயும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 31 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 16,917 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் இந்திய அரசு 60.41 சதவீதம் பங்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.