பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பே வெங்காயம் விலையானது சதமடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு முக்கிய முக்கிய காரணம் வரத்து குறைவே என்கின்றனர் சிறு வியாபாரிகள்.
அதோடு வெங்காயம் விலை மட்டும் அல்ல, உருளைக்கிழங்கு விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
காய்கறிகள் விலை அதிகரிப்பு
கடந்த மாதம் புரட்டாசி என்பதால் காய்கறிகள் அதிக அளவில் விற்பனையானது. இதனால் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருந்து வந்தது. இதற்கிடையே புரட்டாசி மாதம் நிறைவுற்ற நிலையில், நவராத்திரி தொடங்கி விட்டது. ஆக தற்போது நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் சைவ உணவையே சாப்பிடுவார்கள் என்பதால் மீண்டும் காய்கறி விலையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. காய்கறிகளின் தேவையும் அதிகரித்து விட்டது, ஆனால் அதே நேரம் வரத்து குறைவால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வரத்து குறைவு & சேதாரம் அதிகம்
ஒரு புறம் வரத்து குறைந்தாலும், மறுபுறம் சேதராமும் அதிகரித்துள்ளது. அதாவது மழைக்காலம் என்பதால் வெங்காயம் அழுகலும் அதிகரித்துள்ளது. ஆக அந்த நஷ்டத்தினையும் ஈடுகட்ட, சிறு வியாபாரிகள் விலையை சற்று கூடுதலாக வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெங்காயம் விலை
வெங்காயம் விலையை பொறுத்தவரையில் சில இடங்களில் கிலோ 100 ரூபாய் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் கிலோவுக்கு 20 - 30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதே மொத்த வெங்காயத்தின் விலை 45 - 55 ரூபாயாக உள்ளது.
வெங்காய உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான மழைப் பொழிவால் வெங்காய உற்பத்தியில் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காய வரத்து குறைவாக உள்ளது.
வெங்காயம் விலை மும்மடங்கு அதிகம்
குறிப்பாக தென்னிந்திய நகரங்களில் வெங்காயம் விலை கடந்த சில வாரங்களில் மட்டும் மும்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், கோயமுத்தூர், சேலம், சென்னை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் முதல் தர சின்ன வெங்காயம் சதமடித்துள்ளது.
உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு
உருளைக்கிழங்கின் விலையானது கடந்த 10 தினங்களுக்கு முன்பு 25 - 40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இது தற்போது 40 - 50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதரணமாக அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே, கர்நாடாகவிற்கு சப்ளை ஆரம்பித்து விடும். ஆனால் தற்போது பருவமில்லாத மழை காரணமாக இது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உருளைகிழங்கின் இருப்பும் குறைவாகவே உள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
விலை இன்னும் அதிகரிக்கும்
பண்டிகை சீசனை முன்னிட்டு வெங்காயத்துக்கான தேவை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பதால் விலையேற்றம் இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதே சதமடித்துள்ள வெங்காயத்தின் விலையானது இன்னும் விழாக்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது எவ்வளவு அதிகரிக்குமோ தெரியவில்லை. அதற்குள் போதுமான வெங்காயம் இறக்குமதி செய்யப்படுமா? அரசின் நடவடிக்கை கைகொடுக்குமா? பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.