சென்னை: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக அரசு இறக்குமதி சலுகைகளை ஊக்குவித்திருந்தாலும், அந்த இறக்குமதியானது சரியான அளவில், சரியான நேரத்தில் வந்த பாடில்லை.
இந்த நிலையில் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய் வரையிலும், சில இடங்களில் 160 ரூபாய் வரையிலும் கூட விற்பனையாகி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் நாசிக் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு பாதி கூட வரத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமே வெங்காயம் விலை கடும் உச்சத்தை கண்டுள்ளது.
தமிழகத்தில் வெங்காயம் விளையும் பகுதிகளில் வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே அதிகளவில் வெங்கயம் உற்பத்தி செய்யப்படும் மற்ற மாநிலங்களில் மழையின் காரணமாக உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அப்படியே விளைச்சல் இருந்தாலும் அவைகள் தண்ணீரில் பயிர்கள் நாசமாகியிதால், வழக்கத்தை விட உற்பத்தி குறைந்துள்ளது.
இந்த நிலையில் சின்ன வெங்காயம் மொத்த விலையே 70 - 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இதே பழைய வெங்காயம் 100 -120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனுடன் ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவு என சேர்த்து 150 ரூபாய்க்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது. இதனால் வரும் வாரத்தில் விலை 200 ரூபாய் வரை தொடலாம் என்றும் கருதப்படுகிறது.
இதே பெரிய வெங்காயத்தின் விலையானது 70-100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் அரசின் நடவடிக்கையால் வரும் வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் வரத்து வர ஆரம்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் இப்போதைக்கு வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை. இந்த ஜனவரி முதல் வெங்காயத்தின் வரத்து அதிகரிக்கலாம் என்றும் கருதபப்டுகிறது. இதனால் விலையும் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இதே போல முருங்கைக் காய் விலையும், கத்திரிக்காய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.