பெங்களூரு: வெங்காயத்திற்கான விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சில இடங்களில் 200 ரூபாயை தொட்டுள்ளது. இது வரலாறு காணாத விலையேற்றமாகும்.
இது சந்தைகளில் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக, இந்த அளவுக்கு விலையேற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக பெங்களூரில் சில்லறை வர்த்தகத்தில் 200 ரூபாயைத் தொட்டுள்ளது. இதே மொத்த விலை வர்த்தக்கத்தில் குவிண்டாலுக்கு 5,500 - 14,000 ரூபாயாக வர்த்தகமாகியும் வருவதாகவும், அம்மாநில வேளாண் சந்தைப்படுத்துதல் அதிகாரி சித்தகங்கையா என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக தமிழகங்களில் ஹோட்டல்களில் வெங்காய உபயோகம் குறைந்துள்ளது. குறிப்பாக சில உணவுகளுக்கு வெங்காயத்தை தவிர்த்து முட்டைகோஸை பயன்படுத்தும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சித்தகங்கையாவின் கூற்றுப்படி, வெங்காய விலை உயர்வானது, ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 150 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கர்நாடாகாவில் மட்டும் வெங்காய உற்பத்தி 20.19 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்து வருகிறது. எனினும் நடப்பு ஆண்டில் இது கிட்டதட்ட 50 சதவிகிதம் பயிர் இழப்பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்தும் பாதியளவே வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகளவு மழையினால் வெங்காய உற்பத்தி குறைந்துள்ள நிலையில், நவம்பரில் கர்நாடாகா சந்தைகளில் ஒரு நாளைக்கு 60 - 70 குவிண்டால் வெங்காயம் கிடைத்தது. இது டிசம்பரில் 50 சதவிகிதமாக சரிந்துந்துள்ளது. இதுவே வெங்காய நெருக்கடிக்கு வழி வகுத்தது.
வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கும் நோக்கில், வேளாண்மை உற்பத்தி சந்தைக் குழு விடுமுறை நாட்களில் கூட வெங்காய வர்த்தகம் நடைபெற வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதே வேளையில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடம் கூட அதிக பங்கு இல்லை என கூறப்படுகிறது. அதிலும் கர் நாடாகவில் வெங்காயத்தை சேமிக்கும் சிறந்த சேமிப்பு வசதிகள் இல்லை என்றும் சித்தகங்கையா கூறியுள்ளார். எனினும் இந்த நேரத்தில் கூட வெங்காய பதுக்கல்கள் குறித்தான சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வரலாறு காணாத விலை உயர்வு காரணமாக, அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த வெங்காயம், வீடு மற்றும் ஓட்டல் உணவுகளில் மாயமாகி வருவதை பார்க்க முடிகிறது.
பயிர் விளைச்சல் பாதிப்பு காரணமாகவும், அறுவடைக்கு பிந்தைய இழப்பு காரணமாகவும் வெங்காயத்தின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.வெங்காயத்தை அறுவடை செய்யும் போது கனமழை பெய்ததால், நல்ல தரமான வெங்காயங்கள் பல இடங்களில் அழுகி விட்டன. இதனால் தேவை அதிகம் இருந்தும், உற்பத்தி குறைவால் வரலாறு காணாத விலை உயர்வை வெங்காயம் சந்தித்துள்ளது.