இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மூச்சு திணறல் அதிகமாக இருக்கும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அடிப்படை தேவையாக இருக்கும் ஆக்சிஜன்-க்கு அதிகளவிலான தேவை உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியும், விலையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சொந்தமாகப் போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முற்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைனில் போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விற்பனை
இந்தியாவில் பல முக்கிய மாநிலங்களில் இருக்கும் மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜென் சிலிண்டர் இல்லாமல் இருக்கும் நிலையில் ஆன்லைனில் இதன் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து ஆக்சிஜன் சிலிண்டரின் டீலர்கள் கூறுகையில் கடந்த 4 நாட்களில் போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை சுமார் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரிப்பு
இதேவேளையில் சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தாலும் கொரோனா தொற்றால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டரின் விலையும் 20 முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
டிமார்ட், அமேசான், பிளிப்கார்ட்
மேலும் ஆன்லைன் விற்பனை தளங்களான டிமார்ட், அமேசான், பிளிப்கார்ட் ஆகிய ஈகாமர்ஸ் தளத்திலும் போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டர் ஸ்டாக் தீர்ந்துள்ளது. மேலும் ஸ்டாக் இருந்தாலும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
டெலிவரி காலம்
போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை குறுகிய காலத்தில் அதிகளவில் உயர்ந்துள்ள நிலையில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தைகளில் ஆர்டர் செய்தாலும் 10 முதல் 15 நாட்கள் டெலிவரி காலம் தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ரீடைல் சந்தை விற்பனை
ரீடைல் சந்தையில் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கொரோனா தொற்று ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருவதும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான இடவசதியும், படுக்கை வசதியும் இல்லாதது தான் முக்கியக் காரணமாக விளங்குகிறது.
மூச்சு திணறல் பிரச்சனை
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறும் நிலை உருவாகியிருக்கும் நிலையில் தொற்று ஏற்பட்டு உள்ளவர்கள் மூச்சு திணறல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டர்-ஐ வாங்குகின்றனர்.
2.7 கிலோ ஆக்சிஜன் 5000 ரூபாய்
தற்போது சந்தையில் 2.7 கிலோ எடை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் 2 மணிநேரம் 4 நிமிடம் தூய ஆக்சிஜனை பெற முடியும். இதன் விலை தற்போது 5000 ரூபாயாக உள்ளது. இதேபோல் 3.4 கிலோ, 4.9 கிலோ, 13.5 கிலோ வரையிலான போர்ட்பல் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.