தற்போதைய சூழலில் வாழ்க்கைச் செலவுகள் சொல்லும்படியாக இல்லை. சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சிலர், பால் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் திண்டாடி வருகின்றனர். இன்னும் சிலரோ விலைவாசி ஏறி போய்விட்டது, வேலைப் பளுவும் அதிகரித்துவிட்டது. ஆனால் கைக்கு வருகிற சம்பளம் மட்டும் ஏறவே இல்லை என்று புலம்பி வருகின்றனர். உண்மையிலேயே இதுதான் இன்றைய கார்ப்பரேட் ஊழியர்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது.
2026-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மக்களை வாட்டி வதைக்கும் முக்கியப் பிரச்சனை விலைவாசி உயர்வு. அதற்கு ஈடு கொடுப்பதற்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை என்பதே இன்றைய ஊழியர்களின் பெரும் வேதனையாக இருக்கிறது. சமீபத்தில் அசோசியேஷன் ஆஃப் சார்ட்டட் செர்டிஃபைடு அக்கவுண்டண்ட் ஒரு ஆய்வை நடத்தினர். அதில் இந்திய ஊழியர்களின் மனநிலை குறித்த பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
அந்த ஆய்வில், இந்தியாவில் பணிபுரியும் பலர் சம்பளம் பெற்றுக்கொண்டு தங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று புலம்புவதாக தெரியவந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் வெறும் 29 சதவீத ஊழியர்களுக்கு மட்டும் தான் திருப்திகரமான சம்பளம் கிடைக்கிறதாம். அதிலும் சில ஊழியர்கள் AI தொழில்நுட்பம் தங்களுடைய வேலையை பறித்துவிடுமோ என்ற பயத்திலேயே தங்கள் பணிக்காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்களாம். கடந்த 2025-ஆம் ஆண்டில் 67% ஊழியர்கள் சம்பள உயர்வை கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வை பார்த்துவிட்டு 2026-ஆம் ஆண்டில் 81 சதவீத ஊழியர்கள், அடுத்த 12 மாதங்களுக்குள் சம்பள உயர்வை கேட்கப் போவதாகவும் தெரியவந்துள்ளது.

வெளியான அறிக்கையின் மூலம் பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவுகள் குடும்பத்தை நடத்த முடியாதவாறு மாறி வருவதைத் தெரிந்து கொள்ளலாம். அதோடு நிறுவனங்கள் மீது விழும் அழுத்தம் அதிகரித்து வருவதும் தெளிவாகிறது.
மேலும் அறிக்கையில் எந்தெந்த தலைமுறையினர் சம்பள உயர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்ற விவரங்களும் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு நடத்தும் போதே 90ஸ் கிட்ஸ் சுமார் 90 சதவீதத்தினர் இந்த ஆண்டு சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜென் Z பிரிவினர் 77 சதவீதமும், ஜென் X பிரிவினர் 75 சதவீதமும் சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றனர்.
உலக நாடுகள் பலவற்றோடு ஒப்பிடும்போது இந்திய ஊழியர்களின் சேலரி எக்ஸ்பெக்டேஷன் ஒரு படி அதிகமாக தான் இருக்கிறது என்பதையும் ஆய்வு முடிவுகள் தெளிவாக காட்டியுள்ளது. உலக அளவில் பார்க்கும்போது வரும் 37 சதவீத ஊழியர்கள் மட்டும்தான் தங்களுக்கு 10 சதவீதத்திற்கும் மேல் சம்பள உயர்வு வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 68 சதவீத ஊழியர்கள் 10 சதவீதத்திற்கு மேல் ஹைக் கொடுத்தால் தான் சரிவரும் என்று ஒற்றைக்காலில் நிற்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. ராக்கெட் வேகத்தில் செல்லும் விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் ஊழியர்களும் அதிரடியாக சம்பள உயர்வை கேட்க தயாராகி வருகின்றனர். ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள நிறுவனங்கள் வேறு எந்த யுக்தியை கையாண்டாலும் இனி வேலைக்கு ஆகாது போல் தெரிகிறது. மறுபக்கம் நிறுவனங்களை யோசித்தாலும், அவர்களுடைய லாபம் மற்றும் சேலரி போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இனிவரும் காலங்களில் ஊழியர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து நிறுவனங்கள் தங்கள் லாபத்தையும் தக்க வைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications