வெறும் 30% மட்டும் தான் 3 வருசத்த தாண்டுது? கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க..MF நிதி மேலாளர்கள் புலம்பல்?

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளானது, முதலீட்டாளர்களின் மிகவும் நம்பிக்கையான முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக மாதந்தோறும் சிறிய தொகைகளை சேமிக்கும் எஸ் ஐ பி(SIP) திட்டத்தின் மூலம் அதிகமானவர்கள் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை போட்டுடைத்துள்ளது. அதாவது மியூச்சுவல் ஃபண்டில் நுழையும் முதலீட்டாளர்களில் வெறும் 30% மட்டுமே, 3 ஆண்டுகளுக்கும் மேல் தங்கள் முதலீட்டை தொடருகிறார்களாம். இந்த சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.

குறிப்பாக நீண்ட கால மூலதன ஆதாய வரி எனப்படும் LTGC வரியை, முதலீட்டாளர்களின் ஆர்வத்தை எப்படி குறைக்கிறது என்றும், வரிச் சலுகைகளின் அவசியம் குறித்தும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடு செய்யத் தொடங்கினாலும், ஏன் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதற்கு என்னதான் தீர்வு என்பது குறித்தும் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

வெறும் 30% மட்டும் தான் 3 வருசத்த தாண்டுது? கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க..MF நிதி மேலாளர்கள் புலம்பல்?

எஸ் ஐ பி-ஐ இடையில் நிறுத்த காரணங்கள்?

நிதி மேலாளர்களின் கருத்துப்படி, முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு எஸ்ஐபி -ஐ நிலைத்து முதலீடு செய்யாததற்கு பின்வரும் காரணங்களை பட்டியலிடுகின்றனர்.

· சந்தை ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் போது, எங்கே நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தில் பலரும் வெளியே வந்துவிடுகிறார்கள்.

· இரண்டாவது, முறையாக அவசர கால நிதி என்பதை பலரும் வைத்திருப்பதில்லை. வீட்டில் ஏதேனும் அவசர தேவை அல்லது விசேஷம் என்றால் முதலீட்டை இடையில் நிறுத்தி பணத்தை எடுத்து விடுகிறார்கள்.

· பலரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பணத்தை போட்டாலே, சிறிது காலத்தில் பணம் இரட்டிப்பு ஆகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் சந்தையில் மெதுவான வளர்ச்சி இருக்கும்பட்சத்தில், லாபம் குறைவாக இருக்கிறது. இதனால் ஏமாற்றமடைந்து வெளியேறுகின்றனர்.

· அடுத்ததாக பலரும் ஒரு சரியான நிதி மேலாண்மை என்பதை கொண்டிருப்பதில்லை. ஓர் இலக்கை நிர்ணயம் செய்து, அதற்கு முதலீடு செய்யாமல், குறிப்பிட்ட லாபம் வந்தவுடன் அதைத் தொடர விருப்பம் இல்லாமல் எடுத்துவிடுகிறார்கள்.

· சந்தை பற்றிய போதிய அனுபவம் உள்ள முதலீட்டாளர்கள் கூட, நீண்ட கால ஆதாய மூலதன வரியை கருத்தில் கொண்டு வெளியேறி விடுகின்றனர்.

LTGC எப்படி லாபத்தை பாதிக்கிறது?

ஒருவர் ஒரு பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற முதலீட்டை, ஒரு ஆண்டுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபத்திற்கு இந்த வரியானது விதிக்கப்படுகிறது. இதுவே வீடு, நிலம் அல்லது தங்கம் போன்றவற்றை 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் அது நீண்ட கால முதலீடாக கருதப்படும். இதில் பங்குகள் போன்ற முதலீட்டில் ஈட்டும் லாபம் 1.25 லட்சம் ரூபாயை தாண்டினால், அதற்கு 12.5% வரி விதிக்கப்படும். (இதற்கு முன் இது 10% ஆகவும், வரம்பு 1 லட்சமாகவும் இருந்தது). பிற சொத்துக்கள் (நிலம், தங்கம்) இதற்கும் வரி விகிதம் 12.5% ஆக மாற்றப்பட்டுள்ளது.

நிதி மேலாளரின் கோரிக்கை என்ன?

கம்ப்ளீட் சர்க்கிள் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி (CIO) குர்மீத் சாதா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பங்குகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரியை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். முதலீடு செய்துவிட்டு பொறுமையுடன் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, உரிய பலன் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் 30% முதலீட்டாளர்கள் மட்டுமே 3 ஆண்டுகளை கடக்கின்றனர். இது கவலையளிக்கும் ஒரு விஷயம். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு தேவையான முதலீட்டை ஊக்குவிக்க, ஈக்விட்டி மீதான LTCG வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் விமர்சனம்?

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சதா, இந்தியாவில் முதலீடுகள் அதிக வரி விதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளார். உலகளாவிய முதலீடுகள் நிச்சயமற்றவை என்பதற்கு கடந்த சில ஆண்டுகளே சாட்சி. கடந்த ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2025 பாதி வரையில், அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து 1.6 லட்சம் கோடி ரூபாயை வெளியேற்றியுள்ளனர். ஆனால் வெளி நாட்டுப் பணம் வெளியேறிய அந்த சமயத்தில், இந்திய முதலீட்டாளர்கள் 7 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.

மேலும் கஷ்டப்பட்டு சம்பளம் வாங்குபவர்கள் எஸ் ஐ பி மூலமாகவும், நடுத்தர மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாகவும், பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் மூலமாகவும் முதலீடு செய்யும் போது, அவர்களை ஊக்குவிக்க அரசு என்ன செய்தது? என்று கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அதோடு தற்போதைய வரி விதிப்பு முறைகள் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக மூலதன ஆதாய வரியானது அதிகமாக உள்ளது. முதலீட்டாளர்களுக்கு பணவீக்கத்தைச் சரி செய்யும் இன்டெக்சேஷன் பலன் கிடைப்பதில்லை. அடிக்கடி வரி மாற்றங்கள் செய்யப்படுவதால், நீண்ட கால முதலீட்டாளர்கள் குழப்பமடைகிறார்கள். நீண்ட கால முதலீடுகளும், குறுகிய கால ஸ்பெகுலேஷன் (Speculation) வணிகம் போலவே வரி விதிப்பில் நடத்தப்படுகின்றன. ஆக இது மாற வேண்டும். பொருளாதாரத்தின் அடிப்படை விதி நுகர்வுக்கு வரி விதிப்பதில் தவறில்லை, ஆனால் முதலீடுகளை வளர்க்க வேண்டும். முதலீடுகள் மீது அதிக வரி விதிப்பது செல்வம் உருவாவதைத் தடுக்கும் செயலாகும். அதிக வரி மூலம் அரசு செல்வம் உருவாவதையே தடுக்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.

பிக்சட் டெபாசிட்களும் சரிவு?

வங்கி டெபாசிட் வளர்ச்சி குறைந்து வருவது குறித்து எச்சரித்துள்ள சதா, கடந்த 2023-24 நிதியாண்டில் 13% ஆக இருந்த டெபாசிட் வளர்ச்சி, 2024-25-ல் 10% ஆக குறைந்துள்ளது. இதனால் வங்கிகளின் நிதிச் செலவு அதிகரித்து, கடன்கள் விலை அதிகரிக்க வழிவகுக்கின்றன. இது சிறு, குறு தொழில்களை பாதிப்பதோடு நிதி நிலைத்தன்மையையும் பலவீனப்படுத்தும் என எச்சரித்துள்ளார். ஆக சேமிப்பு கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு 80TTA பிரிவின் மூலம் வரி விலக்கு, தற்போது 10,000 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக பிக்சட் டெபாசிட்டில் பணத்தை போட்டு வைக்கும் முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டும். இது வங்கிகளில் நீண்ட காலத்திற்கு நிதி இருக்க உதவும் என்றும் கூறியுள்ளார். அதோடு LTGC மற்றும் STGC போன்ற வரிகளையும் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+