பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் நாடுகள் மற்றும் அதன் கூட்டமைப்பு நாடுகள், அடுத்து வரும் மே ஜூன் மாதத்தில் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வெளியான அறிக்கையில் அடுத்து வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில், ஒரு நாளைக்கு 10 மில்லியன் பேரல்கள் உற்பத்தி குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதற்கு ஓபெக் நாடுகள் அனைத்தும் ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
கொரோனா நெருக்கடியின் மத்தியின் கச்சா எண்ணெய் விலை படு பாதாளத்திற்கு சென்றது. மேலும் இந்த நிலையில் நுகர்வும் குறைந்துள்ளது. இதனால் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு 18 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. ஆக தொடர்ச்சியான இந்த விலை வீழ்ச்சியை தடுக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இந்த நாடுகள் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உற்பத்தி குறைப்பு
இது மட்டும் அல்ல ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒரு நாளைக்கு 8 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2022 வரையில் இது ஒரு நாளைக்கு ஆறு மில்லியன் பேரல்கள் குறைக்கப்படுக்ம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டம்
இது தவிர அடுத்து வரும் ஜூன் 10 அன்று ஒரு வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தினை நடத்தபோவதாகவும் அறிவித்துள்ளது. எனினும் இந்த குழுவுக்கு வெளியே உள்ள நாடுகளின் எண்ணெய் உற்பத்தி குறைப்பதற்கான நிபந்தனைகளை அது குறிப்பிடப்படவில்லை. கொரோனா வைரஸின் காரணமாக உலகளாவிய எரிபொருள் தேவை 30% குறைத்துள்ளது. இது வெகுவாக விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
விலை யுத்தம்
சவுதி அரேபியாவுக்கு ரஷ்யாவுக்கு இடையே இந்த பிரச்சனையானது பூதாகரமாக கிளம்ப, சவுதி இதனை பொருட்படுத்தாமல் நாங்கள் அடுத்த மாதத்தில் இருந்து கூடுதலாக ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யப்போகிறோம் என்றும் கூறியது. அது மட்டும் அல்ல விலையும் பல குறைவாக கொடுக்க உள்ளதாக கூறியது. இது கச்சா எண்ணெய் விலையில் ஒரு விலையுத்தத்தினை கொண்டு வரலாம் என்ற நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் இதில் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தக் கூறினார்.
விலை அதிகரிக்கலாம்
அவ்வாறு உடன்பாடு ஏற்படவில்லை எனில் தான் அதிலும் குறுக்கிடுவேன் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நிலையிலேயே இந்த ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்துள்ளது எனலாம். இது விலை அதிகரிக்க காரணமாக அமையும். ஆக அப்படின்னா இனி வரும் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அப்படித்தானே..
பெட்ரோல் டீசல் விலை”?
நாட்டில் நிலவி வரும் தற்போதைய காலங்களில் அது அவ்வளவாக பாதிக்காது எனினும், லாக்டவுனுக்கு பிறகு நிச்சயம் இது பாதிக்கும். அதிலும் கச்சா எண்ணெய் விலை 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. குறிப்பாக கடந்த 25 நாட்களாக விலையில் பெரும் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.