சியோமி-யில் துவங்கி ஹூவாய், விவோ வரையில் அடுத்தடுத்து பல முன்னணி சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அடுத்தடுத்து, பண மோசடி, வரி ஏய்ப்பு, பணச் சலவை குற்றங்களைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய முதலீட்டுகள், வர்த்தக விரிவாக்கங்களைச் செய்வதைக் குறைத்துள்ளது.
இந்த நிலையில் விவோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான BBK எலக்ட்ரானிக்ஸ் கீழ் இயங்கும் மற்றொரு பிராண்டான ஓப்போ இந்தியாவில் புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
Oppo - விஹான் திட்டம்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Oppo வெள்ளிக்கிழமை, இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs)மேம்படுத்துவதன் மூலம் தனது உற்பத்தியை அளவையும், சூழலையும் வலுப்படுத்தும் 'விஹான்' திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
470 கோடி ரூபாய் முதலீடு
'விஹான்' திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஓப்போ நிறுவனம் இந்தியாவில் சுமார் 60 மில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட 470 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி 5 பில்லியன் டாலர்
ஓப்போ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் ஏற்றுமதி திறனை 5 பில்லியன் டாலராக விரிவுபடுத்த இந்த முதலீடு உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த முதலீடு மூலம் இந்தியாவில் இருக்கும் ஓப்போ வர்த்தகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், அதேபோல் இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
புதிய தொழில்நுட்பங்கள்
அந்த நேரத்தில் ஓப்போ நிறுவனம் 5G, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், இந்தியாவில் இருந்து புதிய ப்ராடெக்ட் டெவலப்மென்ட் செயல்முறையை விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
4389 கோடி ரூபாய் மோசடி
இந்தியாவின் நான்காவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக விளங்கும் ஓப்போ சுங்க வரி ஏய்ப்புச் செய்ததாக 4389 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், இந்தியாவில் அதன் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications