அதிக ஆரவாரங்கள் இன்றி, தமிழக மாநிலத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்.
வரும் 2020 - 21 நிதி ஆண்டில், தமிழக அரசின் மொத்த வருவாய் 2.19 லட்சம் கோடியாக இருக்குமாம். ஆனால் தமிழக அரசசின் செலவீனங்கள் 2.41 லட்சம் கோடியாக இருக்குமாம்.
ஆக 22,000 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தான் தாக்கல் செய்தார் நம் நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்.
பார்ப்போமா
இருப்பினும், இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதி அமைச்சர் ஓபிஎஸ், சர்வதேச பொருளாதாரம் பற்றியும் கொஞ்சம் தொட்டுப் பேசி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உடன், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட்டு பெருமிதப்பட்டதைத் தான் இங்கு இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
முதலீடுக்கு நாங்கள் தான்
நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் தன் பட்ஜெட் உரையில் "பல பன்னாட்டு நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் விரும்பி முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகம் இன்றைக்கும் விளங்கிக் கொண்டு இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார். மேற்கொண்டு வரும் முதலீடுகளும், சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளும் மக்களுக்கு மென்மேலும் வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் உருவாக்கித் தரும் எனச் சொன்னார்.
எதிர் கொண்ட தமிழகம்
மேலும் பேசிய நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் "இன்றைய உலக மற்றும் தேசிய பொருளாதார சூழலில் வீசும் எதிர் காற்றை தமிழ் நாடும் எதிர் கொண்டு வருகிறது. அனைத்து இந்திய அளவில் 2019 - 20-ம் ஆண்டுக்கான கணிக்கப்பட்ட பொருளாதார ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தமிழகம் இந்த சவால்களைச் சமாளித்து இருக்கிறது". எனச் சொல்லி இருக்கிறார்.
இந்தியாவை விட அதிகம்
தமிழகத்தின் பன்முக பொருளாதாரம் போன்ற காரணங்களால், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் தமிழக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.17 சதவிகிதம் அடைவதை உறுதி செய்து இருக்கிறதாம். அதே போல 2019 - 20 நடப்பு நிதி ஆண்டிலும் 7.27 சதவிகிதம் வளர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறதாம். இது இந்தியாவின் வளர்ச்சி விகிதங்களை விட அதிகம் என பெருமையோடு சொல்லி இருக்கிறார் நம் நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்.