இன்றைய சூழலில் ஐடி துறையில் நடக்கும் மாற்றங்கள் ஒவ்வொரு ஊழியரின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. உலகளவில் முன்னணி ஐடி நிறுவனமாக விளங்கும் ஆரக்கிள், கடந்த 12 மாதங்களில் மட்டும் 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவோ வழக்கம் போல ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தான். இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாகவே இவ்வளவு ஊழியர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
சமீபத்தில் ஆரக்கிள் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதன்படி 2026-ஆம் ஆண்டின் மே 31 வரையில் ஆரக்கிள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,41,000 ஆக இருந்தது. ஆனால் 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,62,000 ஆக இருந்தது. அதாவது ஒரே வருடத்தில் 21,000 பேரின் வேலை பறிபோயுள்ளது.
இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த பணி நீக்கங்களுக்கெல்லாம் காரணம் AI தொழில்நுட்பம் தான். இனிவரும் நாட்களிலும் இந்தப் பணிநீக்கம் தொடரும் என்று அந்தந்த நிறுவனங்களே ஒப்புக்கொள்கிறது. அப்படித்தான் ஆரக்கிள் நிறுவனமும் இனிவரும் ஆண்டுகளில் தொடர்ந்து பணிநீக்கம் இருக்கலாம் என்று கூறியுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களைப் போலவே ஆரக்கிள் நிறுவனமும் AI மற்றும் கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சக்கு மாறுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆட்குறைப்ப நடவடிக்கைகளுக்கு நஷ்டஈடாக இந்த நிதியாண்டில் மட்டும் 1.84 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இந்திய மதிப்பிற்கு பார்த்தால் கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடிகள். கடந்த நிதியாண்டில் 374 மில்லியன் டாலர் மட்டுமே ஆரக்கிள் நிறுவனம் செலவு செய்தது.
இப்படி ஆரக்கிள் நிறுவனம் தொடர்ந்து செயல்திறன் அடிப்படையில் பணிநீக்கம் செய்து வருகிறது. அதோடு ஓபன்எஐ மற்றும் மெட்டா போன்ற முக்கிய நிறுவனங்களுடன் பிரம்மாண்டமான கிளவுட் ஒப்பந்தங்களையும் ஆரக்கிள் நிறுவனம் செய்துள்ளது. அதோடு இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தேவைப்படும் கிளவுட் கம்ப்யூட்டிங் வசதியை வழங்குவதற்காக ஆரக்கிள் நிறுவனம் தங்களுடைய டேட்டா சென்டர்களை விரிவுபடுத்தும் வேலையையும் உன்னிப்பாக செய்து வருகிறது.
ஏற்கனவே ஸ்ரீதர் வேம்பு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மட்டுமல்ல நிறுவனங்கள் சந்திக்கும் பொருளாதார மந்த நிலையே பணி நீக்கங்களுக்கு காரணம் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பினார். அதேபோல தற்போது நிறுவனமும் கையில் போதிய கேஷ் இல்லாத காரணத்தினால் கடன் வாங்க தொடங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 70 பில்லியன் டாலர்களை, ஆரக்கிள் நிறுவனம் AI உள்கட்டமைப்பிற்காக முதலீடு செய்யவுள்ளது. இதற்காக 40 மில்லியன் டாலர் வரை கடன் மற்றும் பங்குகள் மூலம் நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளது.
டயர் 3 கல்லூரிகளில் படித்த மாணவர்களின் வாழ்வாதாரம் தான் கேள்விக்குறியாகியுள்ளது என்று பார்த்தால்.. நம் ஊர் ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மாணவர்களின் வாழ்க்கையிலும் ஆரக்கிள் நிறுவனம் விளையாடி உள்ளது. அதிக அளவில் பிரஷர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தில் ஆரக்கிள் நிறுவனமும் ஒன்று. ஆனால் இந்த முறை ஐஐடி டெல்லி, என்ஐடி வாரங்கல் மற்றும் ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட முக்கிய கல்லூரிகளில் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட ஜாப் ஆபர்களையும் திடீரென ஆரக்கிள் நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதனால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்காலம் தற்காலிகமாக கேள்விக்குறியாக மாறியுள்ளது.
Layoffs.fyi என்ற இணையதளம் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஐடி துறை எத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உலகளவில் 196 நிறுவனங்கள் சேர்ந்து 1,20,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஒருபுறம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளையும், பிசினஸையும் வளர்த்தாலும் மறுபுறம் பல வருடங்களாக உழைத்த ஊழியர்களின் வேலையையும், படித்து முடித்து விட்டு வரும் இளைய தலைமுறையின் கனவுகளையும் தட்டிப் பறிக்க தான் செய்கிறது. எனவே அந்தந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல் தங்களை மாற்றிக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.


Click it and Unblock the Notifications