சர்வதேச அளவிலான டெக் நிறுவனங்களில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பணி நீக்க நடவடிக்கையினை எடுக்க தொடங்கியுள்ளன.
பல நிறுவனங்களும் பணியமர்த்தலையும் குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. செலவினை குறைக்க பல்வேறு வகையிலும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ள டெக் ஜாம்பவான்கள், தேவைக்கு அதிகமாக உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பணி நீக்கம்
அந்த வகையில் ஆரக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணி நீக்க நடவடிக்கையானது அமெரிக்காவில் மட்டும் அல்ல, இந்தியா, கனடா, ஐரோப்பாவிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரக்கிள் திட்டம்?
கடந்த மாதம் ஒரு அறிக்கையில் ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைக்கலாம் என்றும், இதன் மூலம் 1 பில்லியன் டாலர் செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது பணி நீக்க நடவடிக்கையினை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எத்தனை பேர் பணி நீக்கம்?
மே 31 நிலவரப்படி, ஆரக்கிள் நிறுவனம் 143,000 முழு நேர ஊழியர்களை கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஆரக்கிள் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையால் சான் பிரான்ஸ்சிஸ்கோ பகுதியில் உள்ள அதன் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதில் எத்தனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்பது குறித்தான அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை.
இந்தியாவிலும் இருக்கலாம்?
ஆரக்கிளின் இந்த பணி நீக்கம் இந்தியா, கனடா, ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக் நிறுவனங்களின் அறிவிப்பு
ஏற்கனவே தொழில் நுட்ப ஜாம்பவான்கள் ஆன மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் இன்க் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் குறித்து விவாதித்துள்ளன. பணியமர்த்தலையும் குறைப்பதன் மூலம், செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளன.
நிபுணர்கள் கவலை
சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் பணி நீக்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது டெக் நிறுவனங்கள் மட்டும் அல்ல, மற்ற துறைகளிலும் இதே நிலை வரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications