சொத்து பத்திரப்பதிவுகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதாவை தாக்கல் செய்தது.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அவர் இந்த மசோதாவினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தார். தற்போது அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த பத்திரப்பதிவு மசோதாவின் படி ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அந்த சொத்து மூதாதையர் சொத்தாக இருந்தால் அதற்கான மூலப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை மூலப்பத்திரம் இல்லை என்றால் அதற்கான வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் பத்திரப்பதிவு செய்யக்கூடிய அந்த சொத்து அடமானத்தில் இருக்கிறது எனும் போது அடமானம் பெற்ற நபரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழை பத்திரப்பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வேளை மூலப்பத்திரம் அல்லது அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டது என்றால் இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்றுகளை பெற வேண்டும்.
இது தவிர ஆவணம் காணாமல் போனது சம்பந்தமாக உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதற்கான நகலையும் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் தான் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கான ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்பாட்டை அமலுக்கு கொண்டு வந்தது.
இதன்படி பல்வேறு பத்திரப்பதிவு நடைமுறைகளையும் டிஜிட்டல் முறையில் எளிமையாக்கியது. குறிப்பிட்ட சில வகையிலான பத்திரப்பதிவு ,சொத்து பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை சரியான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் வீட்டிலிருந்து மேற்கொள்ளலாம் என அறிவித்தது. இது அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டு மனை சொத்து பதிவுகளுக்கு பொருந்தும். அதாவது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் நீங்கள் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையிலேயே சொத்து பதிவு மேற்கொள்ளலாம்.
இந்த நிலையில் தற்போது இந்த மசோதா நடைமுறைக்கு வருவது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு சொத்தினை பதிவு செய்கிறீர்கள் எனும் போது அதன் அசல் ஆவணம் கட்டாயம் தாக்கல் செய்யப்பட வேண்டும், உங்களுடைய அந்த சொத்து மூதாதையர் சொத்தாக இருக்கும் பட்சத்தில் மூலப்பத்திரத்தை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மூலப்பத்திரம் இல்லை என்றால் வருவாய்த்துறையினரிடம் அதற்கான பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும்.
பரம்பரை சொத்தினை பிரிப்பவர்கள் இந்த புதிய மாற்றத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லை என்றால் சொத்தினை பிரித்து கொண்டாலும் அதனை உங்கள் பெயரில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications