இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் என்ற டக்கென்று நாம் அனைவருக்கும் கூறும் ஒரு பெயர் முகேஷ் அம்பானி, ஆனால் இன்றைய நாணய மதிப்பின் படி இந்தியாவில் ஒருவர் அம்பானியை விடவும் 2 மடங்கு அதிகச் சொத்து மதிப்பு கொண்டவர் ஒருவர் வாழ்ந்துள்ளார்.
சொல்லப்போனால் இந்திய வரலாற்றிலேயே இவர் தான் மிகப்பெரிய பணக்காரராக இருந்துள்ளார் என்பது வியப்பு அளிக்கும் விஷயமாக உள்ளது.
சரி யார் இந்த உஸ்மான் அலி கான்..
உஸ்மான் அலி கான்
1911 முதல் 1948 ஆம் ஆண்டு வரையில் சுமார் 37 ஆண்டுகள் ஹைதராபாத்தை ஆண்டவர் தான் நிஜாம் மிர் உஸ்மான் அலி கான். இவருடைய அன்றைய சொத்து மதிப்பை இன்றைய பணவீக்கத்திற்கு இணையாகக் கணக்கிட்டுப் பார்த்த போது அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.
கடைசி நிஜாம்
1911 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு ஹைதராபாத் நிஜாமாகப் பதவியேற்றார் மிர் உஸ்மான் அலி கான், சுமார் நான்கு தசாப்தங்களாக ஹைதராபாத்-ன் நிஜாம் ஆக இருந்தார். 1948 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகத்தில் ஹைதராபாத்-ஐ இணைக்கப்பட முன்பு ஆண்ட கடைசி நிஜாம், மிர் உஸ்மான் அலி கான். இவருடைய சொத்து மதிப்பு, செல்வம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்றால் மிகையில்லை.
230 பில்லியன் டாலர்
கடந்த ஆண்டின் பணவீக்க அடிப்படையில் கணக்கிடும் போது மீர் உஸ்மான் அலி கானின் இன்றைய நிகரச் சொத்து மதிப்பு 1,74,79,55,15,00,000.00 ரூபாய் அதாவது ரூ. 17.47 லட்சம் கோடி ரூபாய். இதை டாலராகக் கணக்கிட்டால் 230 பில்லியன் டாலர்.
எலான் மஸ்க், முகேஷ் அம்பானி
230 பில்லியன் டாலர் என்றால் இன்று உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க்-கின் சொத்து மதிப்பான 292 பில்லியன் டாலருக்கு சற்றுக் குறைவு ஆனால் முகேஷ் அம்பானியின் 101.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் 2.3 மடங்கு அதிகம்.
சொத்து மதிப்பு
இன்று பணக்காரர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பாக அதிகளவில் நிறுவன பங்குகளாகத் தான் கணக்கு வைத்துள்ளனர். ஆனால் அந்தக் காலத்தில் ராஜாக்கள் தங்களது செல்வத்தை ஆடம்பரத்தின் வாயிலாகவும், மாளிகை, நகைகள், தங்கம், போன்றவற்றின் வாயிலாகத் தான் காட்டுவார்கள்.
ஹைதராபாத் ஸ்டேட் வங்கி
இதன் படி உஸ்மான் அலி கான் பேப்பர்வெயிட்-க்கு பதிலாக வைரத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 1941 இல் உஸ்மான் அலி கான் தனக்காக ஒரு வங்கியை நிறுவினார், இதை ஹைதராபாத் ஸ்டேட் வங்கி என்று அழைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத்
உஸ்மான் அலி கான் ஆடம்பரமான பரிசுகளை வழங்குவதில் மிகவும் பிரபலமானவர், மேலும் பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத்தின் திருமணத்திற்கு வைர நகைகளைப் பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத் சமஸ்தானம்
உஸ்மான் அலி கான் அந்தக் காலகட்டத்திலேயே ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு மின்சாரம், ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் விமானப் பாதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். இதுமட்டும் அல்லாமல் பல நல திட்டங்களுக்குப் பணத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும் பெரும் வள்ளலாகவும் இருந்துள்ளார்.
கல்வி
இதேபோல் ஜாமியா நிஜாமியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மற்றும் தாருல் உலூம் தியோபந்த் போன்ற சில முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நன்கொடை அளித்து, கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.