நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரி, ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலையும், படிப்புக்கு ஏற்ற திறனும் மாணவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால்.. மிகப்பெரிய கேள்விக்குறி தான். மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முதல் கல்லூரி வரையில் அனைவருக்கும் கல்வி கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயம், சொல்லப்போனால் அது தமிழ்நாட்டின் சாதனை என்று கூடச் சொல்லலாம். ஆனால் இன்று பட்டம் பெற்ற தமிழ்நாட்டு இன்ஜினியரிங் மாணவர்கள் செய்யும் வேலைகளைப் பார்க்கும் போதும் நாம் ஏதோ ஒரு இடத்தில் தோல்வி அடைந்துவிட்டோமோ என்று தான் தோன்றுகிறது.
இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் இன்றைய வேலைவாய்ப்பு சந்தை பற்றி ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
இன்ஜினியரிங் மாணவர்கள்
இந்தியா முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளி உலகத்தைச் சந்திக்கும் மாணவர்களுக்கு வெறும் 4 லட்சம் பேருக்குத் தான் சரியான துறையில் வேலை கிடைக்கிறது
மீதமுள்ள மாணவர்களின் நிலை என்ன..?
வெறும் 3 சதவீதம்
ஒவ்வொரு வருடமும் சராசரியாக 15 லட்சம் இன்ஜினியரிங் மாணவர்கள் பட்டம் பெற்று வரும் நிலையில் வெறும் 3 சதவீதம் பேர் தான் அதாவது 40,000 மாணவர்களுக்குத் தான் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் பெரு நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.
இதுவும் இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுபவர்கள் பெரும்பாலும் நாட்டிலேயே பிரபலமான கல்லூரிகளில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடி வேலைவாய்ப்புகள்
இதேபோல் 2.2 லட்சம் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐடி துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பெரும் பகுதி இத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் அதிகப்படியாக 3 முதல் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வேலை கிடைக்கிறது.
இதர துறைகள்
மேலும் 1.5 லட்சம் பட்டதாரி மாணவர்களுக்கு அவர்கள் படித்த துறையிலேயே வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெரைன், பேஷன் ஆகிய துறைகளில் படித்தவர்களுக்கு இத்துறை சார்ந்த பணிகள் கணிசமாகக் கிடைக்கிறது.
மற்ற மாணவர்கள்
கிட்டதட்ட 11 லட்ச மாணவர்களுக்கு அவரவர் படிப்பு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் கிடைக்கும் வேலைகளில் பணியாற்றுகின்றனர். அதிலும் பல லட்ச மாணவர்கள் குறைவான சம்பளத்தில் வேறு வழி இல்லாமல் வேலை செய்து வருகின்றனர்.
இன்னும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பே கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
என்ன காரணம்..?
இந்தப் பிரச்சனைக்கு 2 முக்கியக் காரணம் உள்ளது. முதலில் கல்லூரி, பட்டதாரி மாணவர்கள் இருக்கும் அளவில் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை இதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
மற்றொன்று இன்றைய வேகமாக வளர்ந்து வரும் சந்தை தேவைக்குப் போதுமான திறன் இன்ஜினியர்கள் பட்டதாரி மாணவர்களிடம் இல்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 2ஆம் 3ஆம் தர நகரங்களில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் தான். இந்தத் திறன் பற்றாக்குறை பெரிய அளவில் உள்ளது இதையும் நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.