இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்பதும் கிட்டத்தட்ட அனைவரும் ஆதார் அட்டை வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே.
ஆதார் என்பது இந்திய குடிமகனின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்ட நிலையில் ஆதார் அட்டை இல்லாத இந்தியர்களே இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்துடன் இந்தியாவில் மொத்தம் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
134 கோடி ஆதார் எண்கள்
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 134.11 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுப்பிப்பு
ஜூலை மாதத்தில் மட்டும் 1.47 கோடி ஆதார்களை வெற்றிகரமாக மக்கள் புதுப்பித்துள்ளனர் என்றும் ஜூலை இறுதி வரை 63.55 கோடி ஆதார் எண்கள் குறித்த மக்களின் கோரிக்கைகள் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் மூலம் பரிவர்த்தனைகள்
ஜூலை மாதத்தில், ஆதார் மூலம் 152.5 கோடி அங்கீகார பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜூலையில் மட்டும் இதுவரை 7855.24 கோடி ஆதார் அங்கீகாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் 7702.74 கோடி ஆதார் அங்கீகாரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
93.41% பேர்களிடம் ஆதார் அட்டை
ஜூலை மாதத்தில் மட்டும் 53 லட்சத்துக்கும் அதிகமான புதிய ஆதார் அட்டைகள் உருவாக்கப்பட்டன என்றும், அவற்றில் பெரும்பாலானவை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 93.41% பேர்களிடம் ஆதார் அட்டை உள்ளது என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆதார் மூலம் பலன்கள்
மத்திய மற்றும் மாநிலங்கள் மூலம் நடத்தப்படும் நாட்டில் உள்ள சுமார் 900 சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது என்றும், எல்பிஜி, எம்ஜிஎன்ஆர்இஜிஏ மற்றும் தேசிய சமூக உதவித் திட்டம் அல்லது என்ஏஎஸ்பிக்கான நேரடிப் பலன் பரிமாற்றம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் மூலம் பலன்களை பெற ஆதார் முக்கிய காரணமாக உள்ளது.
e-KYC பரிவர்த்தனைகள்
ஜூலை மாதத்தில், ஆதார் மூலம் மேற்கொள்ளப்பட்ட e-KYC பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 22.84 கோடி என்றும், e-KYC பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 1226.39 கோடி என்றும் ஜூலை மாதத்தில் 1249.23 கோடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் வைத்திருப்பவரின் சம்மதத்தை பெற்றே e-KYC பரிவர்த்தனை செய்யப்படுகிறது.