இந்திய வங்கிகள் நீண்ட காலமாகவே வாராக் கடனால் தத்தளித்து வரும் நிலையில் தொடர்ந்து இயங்க முடியாமல் தவித்து வருகின்றன.இந்த நிலையில் சீர்குலைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து வங்கி திவால் சட்டம் உள்ளிட்ட, பல சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக பல பொதுத்துறை வங்கிகளும் இணைக்கப்பட்டன. இதனால் வங்கிக் கிளைகள் இணைக்கப்பட்டும் மூடப்பட்டும் வருகின்றன. அவ்வாறு எத்தனை வங்கிக் கிளைகள் இதுவரையில் மூடப்பட்டிருக்கின்றன என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கவுத் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3,427 வங்கிக் கிளைகளை மூடப்பட்டுள்ளன அல்லது மற்ற வங்கிக் கிளைகளோடு இணைத்துள்ளன என்று தெரியவந்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவிகிதம் வங்கிக் கிளைகள். அதாவது 2,568 கிளைகள், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமானாதாகும்.
2014-15ஆம் ஆண்டில் 90 கிளைகளும், இதே 2015-16ஆம் ஆண்டில் 126 கிளைகளும், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகளும், 2017-18ஆம் ஆண்டில் 2,083 கிளைகளும், 2018-19ஆம் ஆண்டில் 875 கிளைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை ஒன்றிணைத்து வருவாய் ஈட்டும் வங்கிகளாக மாற்றும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பாரதிய மகிளா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகனெர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் உள்ளிட்ட வங்கிகள் 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன.