உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை பாதிக்கும் கோவிட் -19 பெருந்தொற்று மத்தியில், நடப்பு ஆண்டில் தி கிரேட் ரெசிக்னேஷன் தொடர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் 86% ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று, ஆட்சேர்ப்பு நிறுவனமான மைக்கேல் பேஜ் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறைந்த சம்பளமே போதும்?
இந்தியாவில் உள்ள 61% பணியாளர்கள் குறைந்த சம்பளத்தை ஏற்க அல்லது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வைத் தவிர்த்து, சிறந்த வேலை, வாழ்க்கை சமநிலை, ஓட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த தயாராக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
தி கிரேட் ரெசிக்னேஷன் தொடரலாம்
இது குறித்த தரவுகளின் படி, கடந்த 2 ஆண்டுகளில் உலகளாவிய தொற்று நோயால் தூண்டப்பட்ட நிலையில், தி கிரேட் ரெசிக்னேஷன் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இது இன்னும் தீவிரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறைய பேர் வெளியேறலாம்
இந்த நிலையானது சந்தைகள், தொழில்கள், பட்டங்கள் மற்றும் முதுமை என பல பிரிவுகளாக தொடரலாம் என்று இந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் அடுத்த சில மாதங்களில் திறன் மிகுந்த ஊழியர்கள் பெரியளவில் வெளியேற வாய்ப்புள்ளதால், நிறுவனங்களை திறன் மிக்கவர்களை அதிகரிக்க தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
இவ்வாறு வெளியேறும் ஊழியர்கள் சொல்லும் காரணங்களில், தொழில் முன்னேற்றம், சம்பளத்தில் மகிழ்ச்சியின்மை, துறையை மாற்ற ஆர்வம், நிறுவனம் செல்லும் பாதை என பல காரணிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ரொம்ப அதிகமாக இருக்கும்
இதில் கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்று, இந்த ஆய்வு நடத்தப்பட்ட 12 நாடுகளில், இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். இங்கு அதிக ஊழியர்கள் தங்கள் வேலையில் ராஜினாமா செய்து விட்டு வெளியேற தயாராக உள்ளனர். இந்தியாவினை தொடர்ந்து இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் என பலவும் அடங்கும்.
எந்தெந்த துறையில் அதிகம்?
இதில் இன்னும் கவலை தரும் விஷயம் என்னவெனில் தனியார் ஊழியர்களை விட, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக விருப்பத்துடன் உள்ளனர்.இதனை தொடர்ந்து எனர்ஜி, இயற்கை வளங்கள், உற்பத்தி துறை, போக்குவரத்து, சுற்றுலா, சில்லறை வணிகம், மற்ற தொழில்கள் உள்ளன.