இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன விற்பனையானது கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.24% குறைந்துள்ளது.
இது கடந்த ஆண்டு 20% வளர்ச்சிக்கு மாறாக, சரிவினையே கண்டுள்ளது. இது இன்னும் இந்த தொழில்துறையானது சரியான வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்பதனையே சுட்டிக் காட்டுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் படித்தோம். வாகன விற்பனை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வாகனத் துறையில் பச்சை துளிர்கள் முளைக்க ஆரம்பித்துள்ளது என்று. ஆனால் வாகனத் துறையானது இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.
எனினும் இதில் நல்ல விஷயம் என்னவெனில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 27% சரிந்திருந்த வாகன விற்பனையானது, தற்போது அது குறைந்து 10.24% மாக குறைந்துள்ளது தான்.
பிசினஸ் டுடேவில் இன்று வெளியான ஃபடா ஆய்வறிக்கையினை பற்றித் தான் தற்போது பார்க்கவிருக்கிறோம். அது செப்டம்பரில் அனைத்து இந்தியா வாகன பதிவினை தரவினை தெரிவித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களின் பதிவானது கடந்த செப்டம்பரில் முந்தைய ஆண்டினை விட -12.62% குறைந்து, 10,16,977 வாகனங்களாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு செப்டம்பரில் 11,63,918 வாகனங்களாக இருந்துள்ளது.
இதே பயணிகள் வாகன பதிவானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த செப்டம்பரில் 9.81% அதிகரித்து, 1,95,665 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,78,189 வாகனங்களாக இருந்துள்ளது.
இதுவே டிராக்டர் பதிவானது கடந்த செப்டம்பரில் 80.39% அதிகரித்து 68,564 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் வெறும் 38,008 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.
வர்த்தக வாகன பதிவினை பொறுத்தவரையில் கடந்த செப்டம்பரில் 33.65% குறைந்து, 39,600 வாகனங்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 59,683 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே மூன்று சக்கர வாகனங்கள் பதிவானது, 58.86% குறைந்து 24,060 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் 58,485 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆக மொத்தத்தில், ஒட்டு மொத்தத்தில் வாகன பதிவானது 10.24% குறைந்து, 13,44,866 வாகனங்கள், கடந்த செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் 14,98,283 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் இனி வரும் மாதங்களில் இந்த பதிவானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று வரவிருக்கும் விழாக்கால பருவத்தின் வாகன விற்பனையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து கொரோனாவின் காரணமாக மக்கள் பொதுப் போக்குவரத்தினை தவிர்த்து, தனியார் போக்குவரத்திற்கு மாறி வருகின்றனர். இதனாலும் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.