இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான ஆக்சிஜன் இல்லாத நிலை பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இதற்கான டிமாண்ட் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளை செய்யும் நிறுவனங்களின் பங்குகள் தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மிக முக்கியமான இலக்காக மாறியுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளை செய்யும் 5 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐநாக்ஸ் ஏர் பிராடெக்ட்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை.
4 முக்கிய நிறுவனங்கள்
ஆனால் நேஷனல் ஆக்சிஜன், லின்டே இந்தியா, பகவதி ஆக்சிஜன், ககன் கேஸ் ஆகிய 4 ஆக்சிஜன் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முன்னெப்போதும் விடவும் தற்போது அதிகமாக முதலீடு செய்து வரும் காரணத்தால் அதிகளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது.
42 சதவீத வளர்ச்சி
இதன் படி கடந்த ஒரு மாதத்தில் நேஷனல் ஆக்சிஜன் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 42 சதவீதம் அதிகரித்து 62 ரூபாய்க்கும், லின்டே இந்தியா 9 சதவீதம் அதிகரித்து 1,896 ரூபாய்க்கும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 11 மாதத்தில் 500 ரூபாய் அளவீட்டில் இருந்து தற்போது 1,896 ரூபாய்க்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் வளர்ச்சி பாதை
இதேபோல் பகவதி ஆக்சிஜன் மற்றும் ககன் கேஸ் ஆகிய நிறுவனங்களும் அதிகளவிலான தடுமாற்றத்தைச் சந்தித்தாலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.
சிலிண்டர் தயாரிப்பு நிறுவனம்
இதேவேளையில் ஆக்சிஜன் வாயுவை நிரப்பும் சிலிண்டர்களைத் தயாரிக்கும் Everest Kanto Cylinders நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் 21.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் பிரிவைச் சார்ந்த முதலீடுகள் அதிகளவிலான லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.