டெல்லி: ஓயோ நிறுவனம் தனது இந்தியா கிளையில் 2,400 பேரை பணி நீக்க செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான செய்தியில், ஓயோ ஹோட்டல்ஸ் மற்றும் ஹோம்ஸ் நிறுவனம் 2,400 பேரை பணி நீக்கம் செய்யலாம் அல்லது மொத்த ஊழியர்களில் 20% பேரை பணி நீக்கம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து பணி நீக்கம் குறித்தான அறிக்கைகளை வெளியிட்டு வரும் இந்த நிறுவனம், தொடர்ந்து நஷ்டம் கண்டு வரும் நிலையில் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நன்றி கூறிய ரித்தேஷ்
இது குறித்து ஓயோ நிறுவனத்தின் தலைவர் ரித்தேஷ் அகர்வால் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாக லைவ் மிண்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதில் இது எங்களுக்கு எளிதான முடிவு அல்ல. மேலும் நாங்கள் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வதால், வேறுவழியின்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது வரை நிறுவனத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம் தொடரும்
மேலும் இந்த பணி நீக்கமானது இதோடு முடியவில்லை என்றும், இது அடுத்து வரும் மார்ச்சிலும் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. சாப்ட் பேங்கின் ஆதரவுடைய ஒரு விருந்தோம்பல் நிறுவனம், செலவுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கருத்து தெரிவிக்க மறுப்பு
ரித்தேஷ் அகர்வால, எழுதிய கடிதத்தில் பணி நீக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தாலும், அதில் எத்தனை பேர் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் 12,000 ஊழியர்களை கொண்ட ஓயே நிறுவனம், எத்தனை பேரை பணி நீக்கம் செய்ய உள்ளது என்று கூற மறுத்துவிட்டதாகவும் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் பணி நீக்கம்
சர்வதேச நாடுகளில் சில இடங்களில் உள்ள இந்த நிறுவனம், சீனாவிலும் சுமார் 12,000 ஊழியர்களை கொண்டுள்ளதாகவும், இதில் 5% பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
நஷ்டம் அதிகரிப்பு
ஓயோ நிறுவனம் கடந்த 2019ம் நிதியாண்டில் இதன் நிகர இழப்பு 2.384.69 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதன் இழப்பு 360.43 கோடி ரூபாயாகும். 2019ம் ஆண்டில் நஷ்டமானது முந்தைய ஆண்டை காட்டிலும் கிட்டதட்ட ஆறு மடங்கு அதிகமாகும்.
செலவு அதிகரிப்பு
இதற்கு முக்கிய காரணம் இயக்க செலவுகள் மற்றும் பணியாளர் செலவுகள் என்றும் கருதப்படுகிறது. இதில் குறிப்பாக பணியாளர் செலவு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து 1,539 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே இயக்க செலவினங்களும் 6 மடங்கு அதிகரித்து 6,131 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியிருந்தது கவனிக்கதக்கது.