கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து மக்களை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்க, பல நாட்டு அரசுகள் ராப் பகலாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதில் இந்தியாவும் தன் பங்குக்குச் சில பெரிய திட்டங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
நேற்று தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரண திட்டங்களைச் சொன்னார். இன்று காலையிலேயே ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ், சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
ஆர்பிஐ அறிவிப்புகள்
ஆர்பிஐ தன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 சதவிகிதம் குறைத்து இருக்கிறது. அதோடு கேஷ் ரிசர்வ் ரேஷியோவை 1.00 % மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 0.90 சதவிகிதம் குறைத்து இருக்கிறது. அதோடு 3 மாத இ எம் ஐகளை, ஒத்திப் போட வங்கிகளுக்கு அனுமதி அளித்து இருக்கிறது. இது குறித்து ப சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ப சிதம்பரம்
முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம், தன் ட்விட்டர் பக்கத்தில் "மத்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட்டைக் குறைத்து, சந்தையில் நிறைய பணம் புழங்க எடுத்து இருக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்" எனச் சொல்லி இருக்கிறார்.
இ எம் ஐ ஒத்திவைப்பு
மேலும் தன் டிவிட்டர் பக்கத்தில் "மத்திய ரிசர்வ் வங்கி, மக்கள் வாங்கி இருக்கும் கடன்களுக்குச் செலுத்தும் இ எம் ஐ தவணைகளுக்கான தேதியை ஒத்திவைப்பது குறித்த வழிகாட்டுதல் அரை மனதோடு அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதோடு இந்த இ எம் ஐ தேதி ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பு, விவாதத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது" எனச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
எல்லாமே ஒத்திவைப்பு
"மக்கள் வாங்கி இருக்கும் கடன்களுக்கான இ எம் ஐ தேதி ஜூன் 30, 2020-க்குள் இருந்தால், அவைகள் எல்லாமே, 30 ஜூன் 2020-க்குப் பின் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனச் சொல்லி இருந்தேன். ஆனால் தற்போது கடன் வாங்கியவர்கள், கடன் கொடுத்த வங்கியைச் சார்ந்து இருக்க வைத்து இருக்கிறார்கள்" எனச் சொல்லி இருக்கிறார்.