தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த நடிகராக போற்றப்பட்டவர் தான் பி. யு. சின்னப்பா . தற்போது எப்படி ரஜினி - கமல் , விஜய் -அஜித் இடையே திரையுலகில் போட்டி இருக்கிறதோ அதேபோல ஒரு காலத்தில் தியாகராஜ பாகவதர் மற்றும் பி யு சின்னப்பா இடையே போட்டி இருந்தது .
நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் பி யு சின்னப்பா. புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்பதுதான் பி யு சின்னப்பாவின் முழுமையான பெயர். மீனாட்சி அம்மாள் , உலகநாத பிள்ளை தம்பதியின் மகனான இவர் ஐந்து வயதாக இருக்கும் போதே நாடக மேடையில் கால் பதிக்க தொடங்கிவிட்டார்.

இவருடைய தந்தையாரும் நாடக கலைஞர் என்பதால் சிறு வயதில் இருந்தே நாடக மேடையில் நடித்த அனுபவம் கிடைத்தது. இதனால் இளமைப் பருவத்தில் மிகக் கைதேர்ந்த நடிகராக இவர் உருவானார் . இது தவிர சிலம்பம் , குஸ்தி என பல்வேறு திறமைகளையும் கொண்டவராக இருந்தார். 12 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் வெறும் 15 ரூபாய் மாத சம்பளத்தில் இவர் வேலைக்கு சேர்ந்தாராம்.
அப்போது இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சச்சிதானந்த பிள்ளை , பி.யு,சின்னப்பாவின் ஒரு நாடக பாடலை பாடுவதை கேட்டு மெய்மறந்து போனாராம் . உடனடியாக அவருடைய 15 ரூபாய் சம்பளத்தை 75 ரூபாயாக உயர்த்தி அவருடைய திறமைக்கு அங்கீகாரம் தந்திருக்கிறார் . இதனை அடுத்து நாடக மேடையில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்த பி யு சின்னப்பா பின்னர் திரைத்துறையில் கால் பதித்தார்.

சந்திரகாந்தா திரைப்படத்தில் இளவரசனாக தோன்றி தமிழ் சினிமாவின் பாடவும் ,நடிக்கவும் ,சண்டையிடவும் தெரிந்த முதல் நாயகன் என ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடித்த பல்வேறு படங்களுமே வெற்றி பெற்றன. எம்.ஜி.ஆர் இவரை தன்னுடைய குருநாதராக ஏற்றுக் கொண்டார். பின்னர் சக நடிகை சகுந்தலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
திரைத்துறையில் கிடைத்த வருமானம் மூலம் இவர் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் 124 வீடுகளையும் ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் வாங்கினாராம். அந்த சமயத்தில் புதுக்கோட்டை ராஜாவாக இருந்தவர் இனிமேல் இவர் வீடு வாங்க கூடாது என தடை விதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டாராம். ஆனால் தன்னுடைய 35 வயதிலேயே பி யு சின்னப்பா திடீரென காலமானார்.
இதனை அடுத்து அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. தற்போது அவர் குடும்பத்தினருக்கு புதுக்கோட்டையில் எந்த ஒரு சொத்தும் இல்லை. பி யு சின்னப்பாவின் ஒரே மகனான ராஜா பகதூரும் சினிமாவில் நடித்தார் ஆனால் தந்தைக்கு கிடைத்த வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்த குடும்பம் கையில் இருந்த சொத்துக்களை இழந்துவிட்டது. தற்போது புதுக்கோட்டையில் பி யு சின்னப்பாவின் நினைவிடம் மட்டுமே இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications