இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில் அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் தர், இஸ்லாத்தின் பெயரால் நிறுவப்பட்ட ஒரே நாடு பாகிஸ்தான் என்றும், அதன் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அல்லா தான் பொறுப்பு என்று கூறினார்.
இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியில் உருவான பல பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் ஷெபாஸ் ஷெரீப் அரசு தடுமாறி வரும் வேளையில் பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றப் போராடி வரும் வேளையில் எரிபொருள் மீதான விலையை உயர்த்தியுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் அரசு ஏற்கனவே செலவுகளைக் குறைக்கும் விதமாக இறக்குமதிகளைப் பெரிய அளவில் குறைத்த நிலையில், மின்சாரப் பயன்பாட்டையும் அதிகளவில் கட்டுப்படுத்தியுள்ளது. இந்த வேளையில் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அந்நாட்டின் அரசு.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பாகிஸ்தான் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் பெட்ரோல், டீசல் மீதான விலையை லிட்டருக்கு 35 ரூபாய் அளவில் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு அந்நாட்டின் அரசுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
நிதியமைச்சர் இஷாக் தர்
பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் இஷாக் தர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் லிட்டருக்கு 35 ரூபாய் விலை உயர்வு 29 ஆம் தேதி காலை 11 மணி முதல் அமலுக்கு வருகிறது.
விலை உயர்வு
பொதுவாகப் புதிய விலை உயர்வு இரவு 12 மணிக்கு தான் அமலாக்கம் செய்யப்படும், ஆனால் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி காலையிலேயே விலையை அமலாக்கம் செய்யத் தூண்டியுள்ளது. நிதியமைச்சர் இஷாக் தர் இந்த அறிவிப்பை தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார்.
மண்ணெண்ணெய்
இந்த அறிவிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை லிட்டருக்கு 35 ரூபாயும், மண்ணெண்ணெய் மற்றும் லைன் டீசல் ஆயில் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 18 ரூபாய் உயர்த்தப்படுவதாகத் தெரிவித்தார்.
தற்போதைய விலை
இதன் மூலம் பாகிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 249.80 ரூபாய், டீசல் விலை 262.80 ரூபாய் எனப் பாகிஸ்தான் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள டிவீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 189.83 ரூபாயாகவும், லைன் டீசல் ஆயில் 187 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டுமே 7 சதவீதம் சரிந்த நிலையில் வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 4.2 சதவீதம் சரிந்தது. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 259.7148 ஆகச் சரிந்துள்ளது.