பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்த பாகிஸ்தானின் ஐந்து பேர் கொண்ட குழு திங்கள்கிழமை டெல்லிக்கு வரவுள்ளது.
இந்தக் குழு உடன் இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம், வர்த்தகம், மக்களின் வாழ்வு மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூட்டத்தில் ஹைட்ரோபவர் திட்டத்தைத் தாண்டி பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்படுமா..?
இந்தியா பாகிஸ்தான்
திங்கட்கிழமை நடக்கும் இந்த முக்கியமான கூட்டத்தில், இந்தியா பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வெள்ளம் குறித்த முன்கூட்டியே தகவல் மற்றும் சிந்து நதி நீர் நிரந்தர ஆணையத்தின் (பிசிஐடபிள்யூ) ஆண்டு அறிக்கை குறித்து இரு தரப்பினரும் ஆலோசிக்க உள்ளனர்.
3 முக்கியத் திட்டம்
மேற்கில் பாயும் நதிகளில் இந்தியாவால் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டங்கள் குறித்துச் சிந்து நீர் ஒப்பந்தத்தின் பிரிவு IXன் கீழ் 1,000 மெகாவாட் பகல் துல், 48 மெகாவாட் கீழ் கல்நாய் மற்றும் 624 மெகாவாட் கிரு ஆகிய திட்டம் குறித்து இரு தரப்பும் விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிந்து நதி நீர் ஆணையர்
பாகிஸ்தானின் சிந்து நதி நீர் ஆணையர் சையத் மெஹர் அலி ஷா கூறுகையில், "இது PCIW அளவில் 118வது இருதரப்புச் சந்திப்பாகும். முன்னதாக, இரு நாடுகளும் 2022 மார்ச் 2-4 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் மூன்று நாள் பேச்சுவார்த்தை நடத்தியது," எனக் கூறியுள்ளார்.
இரு நாள் கூட்டம்
பாகிஸ்தான் அரசு ஜெஹ்லம் மற்றும் செனாப் நதிகளில் நிறுவி வரும் எந்தவொரு நீர்மின் திட்டத்தைப் பற்றி இக்கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் விவாதிக்கவில்லை என்பது கூடுதல் தகவல் ஆக உள்ளது. மேலும் இக்கூட்டம் இரு நாடுகள் அதிகாரிகள் மத்தியில் மே 30 மற்றும் 31 ஆம் தேதிகள் நடக்க உள்ளது.
5 பேர் குழு
பாகிஸ்தான் ஆணையர் சையத் மெஹர் அலி ஷா தலைமையிலான ஐந்து உறுப்பினர் குழுவில் பஞ்சாப் நீர்ப்பாசனத் துறையின் தலைமைப் பொறியாளர், வானிலை அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல், பாகிஸ்தான் தேசிய பொறியியல் சேவைகளின் பொது மேலாளர் (NESPAK) மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் (DG- MoFA) ஆகியோர் அடங்குவர்.