கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு விலைவாசி விண்ணை தொட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த ஆறு மாதங்களாக பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதும் அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் திண்டாட்டத்தில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பே பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவில் இருந்தது. இந்த நிலையில் தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பணவீக்கம்
பாகிஸ்தானின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் ஏற்பட்டதற்கு காரணம் அந்நாட்டில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளம் என்று கூறப்படுகிறது. இந்த மழை காரணமாக ஏராளமான காய்கறிகள் குறிப்பாக வெங்காயம், தக்காளி, நெல் ஆகிய பயிர்கள் சேதம் அடைந்ததாகவும் இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விலைவாசி
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாகிஸ்தானில் 27.26% விலைவாசி அதிகரித்துள்ளதாகவும் இந்த விலை உயர்வு கடந்த ஜூலை மாதம் 24.93 சதவீதமாக இருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை வெள்ளம்
பாகிஸ்தானின் பணவீக்கம்1975 ஆம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமாக உள்ளது என அந்நாட்டின் மத்திய வங்கி தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியானது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் குறிப்பாக விவசாய தொழில் ஒட்டுமொத்தமாக அழிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டி உள்ளதாகவும் அதேபோல் மின் கட்டண உயர்வும் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் சிரமத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம்
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு $1.1 பில்லியன் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளதாகவும், பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்துள்ள பாகிஸ்தானுக்கு இந்த நடவடிக்கை மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.