ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைனுக்கும் இடையிலான பிரச்சனைக்கு பிறகு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
சில நாடுகள்இதனால் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளன. ஆனால் ரஷ்யாவோ அந்த நஷ்டத்தினை தவிர்க்க குறைந்த விலையில் எண்ணெய் என்ற சலுகையினை அறிவித்தது.
தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்
இதன் காரணமாக இந்தியாவும் சீனாவும், ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றன. இதுவே மேற்கத்திய நாடுகள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தாலும், வெளிப்படையாக எதுவும் கூற முடியாத சூழலில் மேற்கத்திய நாடுகள் உள்ளன. எனினும் தற்போது ஒவ்வொரு நாடாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
பாகிஸ்தானும் ஆர்வம்
இந்தியாவினை போலவே ஏற்கனவே இலங்கை பாகிஸ்தான் நாடுகளும் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டின. தற்போது பாகிஸ்தானும் வெளிப்படையாகவே இது குறித்தான ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளது. அதுவும் இந்தியாவுக்கு வழங்குவது போல சலுகை விலையில் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளது.
பணவீக்கம் உச்சம்
பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், அங்கு பணவீக்கமும் விஸ்வரூபம் எடுத்து தாண்டவமாடி வருகின்றது. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தானை மோசமான வெள்ளமும் புரட்டி எடுத்து விட்டது.
இந்தியாவினை போல திட்டம்
இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்கனவே உச்சத்தில் இருந்த விலைவாசியானது, தற்போது இன்னும் மோசமடையும் சூழலே இருந்து வருகின்றது. இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தான் பாகிஸ்தான் அரசும், இந்தியாவினை போல தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு புரியும்
இது குறித்து பாகிஸ்தான் கொடுத்த அறிக்கையில் பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டதால், அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு புரியும் என நாங்கள் நினைக்கிறோம். இதனால் அவர்கள் எங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நாங்கள் நினைக்கிறோம் என பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.
பைடனின் சர்ச்சை பேச்சு
சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எண்ணப்படி உலகிலேயே மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான் தான். அந்த நாட்டில் அணு ஆயுதங்கள் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இன்றி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் சல சலப்பினை ஏற்படுத்தியது. இது குறித்து பாகிஸ்தானும் விளக்கம் கேட்டு அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மோசமான சூழல்
இதற்கிடையில் தான் தற்போது பாகிஸ்தான் மேற்கோண்டு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டியுள்ளது. இது மேற்கொண்டு ரஷ்யாவுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை கடுமையான சூழலை எட்டியுள்ள நிலையில் வந்துள்ளது.
மிகப்பெரிய இறக்குமதியாளர்
பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் 35வது இடத்தில் உள்ள ஒரு நாடாகும். இது சுமார் 1.92 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்-யினை கடந்த 2020 - 21ல் இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.