பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், நாணய மதிப்பு மோசமாக இருக்கும் நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்கள், எரிபொருள் வாங்குவதற்குக் கூட அரசு பணம் இல்லாமல் தவிக்கும் வேளையில், நடப்பு நாடுகள் உடனும், ஐஎம்எப் மற்றும் உலக வங்கிகளிடம் கடன் வாங்கித் தான் நிலைமையைச் சரி செய்ய வேண்டும் என்கிற நிலை உள்ளது.
Recommended Video
இந்த மோசமான நிலையில் பாகிஸ்தான் அரசு சற்றும் எதிர்பார்க்காத வகையில் முக்கியமான முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்கு மோசமாக இருக்கிறது என்றால் அமெரிக்கா டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 200-ஐ தாண்டியது, எரிபொருள் இல்லாமல் பல மின்சார உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன, வருமானம் இல்லாத அரசு மின்சாரக் கட்டணத்தையும், பெட்ரோல் டீசல் விலையையும் தாறுமாறாக அதிகரித்தது.
பாகிஸ்தான் மக்கள் நிலை
இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்குக் கூடத் தடுமாறி வரும் நிலை தான் இன்றளவும் பாகிஸ்தானில் உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அந்நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையை வலிமைப்படுத்த முடிவு செய்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் நாட்டின் அடுத்தப் பட்ஜெட் அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இது நடப்பு ஆண்டை காட்டிலும் 8,300 கோடி ரூபாய் அதிகமாகும்.
ரூ.1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
பாகிஸ்தான் நாட்டின் பல துறைகள் சலுகைக்காகவும், நிதியுதவிக்காகவும் காத்திருக்கும் வேளையில் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்புத் துறைக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நடப்பு நிதியாண்டு ஒதுக்கீட்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.
பாதுகாப்புத் துறை
இந்த நிதி ஒதுக்கீட்டில் பெரும் பகுதி பணம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் சம்பளம், கொடுப்பனவு போன்றவற்றுக்குச் சென்றாலும், குறிப்பிடத்தக்க தொகை ஆயுதங்களை வாங்கவும், இறக்குமதி செய்யவும் பயன்படுத்தப்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
சீனா நிதியுதவி
பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறையால் தவித்து வருவதற்கு மத்தியில் அந்நாட்டிற்கு உதவும் வகையில் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியைக் கடனாக வழங்கச் சீன வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தப் பணம் விரைவில் பாகிஸ்தான் மத்திய வங்கியில் வைப்பு வைக்கப்படும்.