பொருளாதாரச் சரிவிலும், நிதி நெருக்கடியிலும் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் பெரிய அளவிலான தொகையை நிதியுதவி அளித்திருந்தாலும், பாகிஸ்தானில் ஏற்பட்ட மழை வெள்ளம் அந்நாட்டின் பொருளாதாரத்தையும் நிதிநிலையும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசுக்கும், பொருளாதாரத்திற்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய கடனை சீனா மற்றும் சவுதி அரேபியா கொடுத்துள்ளது.
பாகிஸ்தான்
நிதி பற்றாக்குறையில் தவித்து வரும் பாகிஸ்தான் அதன் முக்கியமான நட்பு நாடுகளான சீனா மற்றும் சவுதி அரேபியா-விடம் இருந்து 13 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கூடுதல் நிதி உதவியாகப் பெற்றுள்ளது என்று பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
சீனா, சவுதி அரேபியா
இந்தப் புதிய நிதியுதவியின் கீழ் 20 பில்லியன் டாலர் முதலீடுகளான உத்தரவாதம் அளிக்கப்படுவதன் வாயிலாக, பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து சுமார் 9 பில்லியன் டாலரும், சவுதி அரேபியா நாட்டில் இருந்து 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெற உள்ளதாக இஷாக் டார் கூறியுள்ளார்.
ஷெஹ்பாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்-பின் சமீபத்தில் சீனா சுற்றுப் பயணத்தின் போது, சீனாவின் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு சுமார் 9 பில்லியன் டாலர் அளவில் நிதி திட்ட உதவிகளை வழங்கியது.
சீன கடன் வலை
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 சதவீதம் சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இதன் அளவு 27 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.
IMF அறிக்கை
பாகிஸ்தான் நாட்டிற்குச் சீனா பிப்ரவரி 2022 வரையில் 25.1 பில்லியன் டாலர் அளவிலான கடனை அளித்திருந்த நிலையில் புதிய 4.6 பில்லியன் கடன் மூலம் மொத்த அளவு 30 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என IMF தெரிவித்துள்ளது.
புதிய 9 பில்லியன் டாலர் நிதியுதவிகள்
இந்த நிலையில் தற்போது அளிக்கப்பட்டு உள்ளது 9 பில்லியன் டாலர் அளவிலான பல்வேறு கடன் மற்றும் நிதியுதவிகள் மூலம் பாகிஸ்தான் நாட்டிற்கான சீனா-வின் கடன் அளவு அதிகரிக்க உள்ளது.
பாகிஸ்தான் - சீனா
பாகிஸ்தான், சீனா மத்தியிலான பேச்சுவார்த்தையின் படி 4 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சவ்ரின் லோன்கள், 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுநிதியளிக்கும் வர்த்தக வங்கிகளின் கடன்கள், சுமார் 1.45 பில்லியன் டாலர் நாணயப் பரிமாற்றம் என மொத்தம் 8.75 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதியுதவி திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
200 மில்லியன் டாலர் கடன்
இதேபோல் சில நாடுகளுக்கு முன்பு 200 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகக் கடன்களைப் பெற்றுள்ளதாகப் பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
அதிவேக ரயில் திட்டம்
இதேபோல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி முதல் பெஷாவர் வரையிலான 9.8 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிவேக ரயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்தச் சீன தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா 10-12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்புத் திட்டத்தைக் குவாடாரில் புதுப்பிக்க ஒப்புக்கொண்டது. இதோடு எல்என்ஜி மின் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகள் வைத்து கடனற்ற வெளிநாட்டு வரவுகளை உருவாக்கும் தனியார்மயமாக்கல் திட்டங்களைப் பாகிஸ்தான் சவுதி அரேபியா உடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார்.