பாகிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது, அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து சரிவு, பாகிஸ்தான் ரூபாய் மதிப்புச் சரிவு, பணவீக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரிப்பு எனச் சுத்தி சுத்தி அடி வாங்கி வருகிறது.
இதற்கிடையில் பல்வேறு மாற்றங்களுக்குப் பின்பு ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து ஆகஸ்ட் மாதம் பெற்ற கடன் பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பிற்கு அதிகப்படியாகச் செலவானது. இந்தத் திடீர் மழை வெள்ளத்தின் மூலம் 1500 பேர் மரணம் அடைந்தனர், பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் நாசமானது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடும் அரசும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை என்ன தெரியுமா..?
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் தற்போது கச்சா எண்ணெய், எரிவாயு, உணவு பொருட்கள் உட்பட அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது, ஆனால் அதற்குப் போதுமான பணம் இல்லை. இதேபோல் வெளிநாட்டில் இருந்து வாங்கிய கடன் பத்திரத்திற்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் அதற்கும் பணம் இல்லாமல் தவிக்கிறது.
வெள்ள பாதிப்பு
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு முன்பு 2022-23 ஆம் நிதியாண்டுக்கான வெளிநாட்டு நிதி தேவை அளவு 33.5 பில்லியன் டாலராக இருந்தது, தற்போது இதன் அளவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் பாகிஸ்தான் நாட்டில் ரூபாய் மதிப்பு 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
30 பில்லியன் டாலர்
தற்போது ஏற்பட்டு உள்ள வெள்ளம் பாதிப்பு அளவு 30 பில்லியன் டாலர் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது பாகிஸ்தான் நட்டிற்கு அதிகப்படியான நிதி தேவை மீண்டும் உருவாகியுள்ளது. இதை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பது தான் தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.
ஐஎம்எப் கடன்
மீண்டும் ஐஎம்எப் கடன் கொடுக்குமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறி தான். பாகிஸ்தான் நாட்டில் தற்போது பென்ச்மார்க் வட்டி விகிதம் 15 சதவீதமாக உள்ளது. இதேபோல் பணவீக்கம் தற்போது 27 சதவீதமாக உள்ளது நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் இது 20 சதவீதமாகக் குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார்
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 5 பில்லியன் டாலர் தொகையைச் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகள் முதலீடு செய்துள்ளது. இது நாட்டின் நிதி நிலை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டாலும், இறக்குமதிக்கும் பத்திர பேமெண்ட்-க்கும் தேவையான நிதி இல்லாமல் உள்ளது.
20 முறை ஐஎம்எப் உதவி
220 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் 350 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார நாடாக உள்ளது. பாகிஸ்தான் நீண்ட காலமாகப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் போராடி வருகிறது, 1958 முதல் சுமார் 20 முறை ஐஎம்எ பாகிஸ்தான் நாட்டைக் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.