இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் ஏராளமான கடன்களை சீனா கொடுத்தது என்பதும், அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில்தான் தற்போது இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையை அடுத்து கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான் நாட்டிற்கும் 2.3 பில்லியன் டாலர் கடன் கொடுக்க சீனா ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, பாகிஸ்தான் உள்பட ஒருசில நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி சீனா அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்து அந்நாட்டில் இருந்து பல பயன்களை பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
2.3 பில்லியன் டாலர் கடன்
இந்த நிலையில் பாகிஸ்தான் ஏற்கனவே அதிக அளவு சீனாவிடம் கடன் வாங்கிய நிலையில் தற்போது சீனாவிடம் மீண்டும் 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சீன வங்கிகள் கூட்டமைப்பு
சீன வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கி உள்ளதாகவும் இந்த கடன் ஒப்பந்தத்தின்படி இன்னும் ஒரு சில நாட்களில் அந்த பணம் பாகிஸ்தானை வந்து சேரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நிதியமைச்சர்
பாகிஸ்தான் நிதியமைச்சர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியபோது '2.3 பில்லியன் டாலர் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க சீன வங்கிகள் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்த கடன் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த பணம் பாகிஸ்தானுக்கு வந்து சேரும் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நன்றி
மேலும் பாகிஸ்தானின் நிதிநிலையை கணக்கில் கொண்டு உதவி செய்த சீனாவுக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தான் நிதி அமைச்சரின் இந்த ட்விட்டிற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பெல்ட் அண்ட் ரோடு
கடந்த 2013ஆம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு என்ற திட்டத்தை சீனா அமல்படுத்தியது. ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு வர்த்தக பாதையை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் சாலை போக்குவரத்து ஏற்படும் என்றும் அதேபோல் கடல் வழியாக போக்குவரத்து ஏற்படுத்தி சீனாவில் உள்ள துறைமுகங்களை உலகின் மற்ற நாடுகளில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் என்றும் இதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றும் கூறப்பட்டது.
துறைமுகங்கள்
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா பெரும் தொகையை கடன் அளிப்பதாக உறுதி அளித்து என்பதும் அது மட்டுமின்றி துறைமுகங்களை மேம்படுத்த, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சீனா உதவி செய்யும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இலங்கையின் கடன்
இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு இலங்கை பெரும் தொகையை சீனாவிடமிருந்து கடன் பெற்றது என்றும் அந்த தொகையால் இலங்கையின் துறைமுகங்கள் வளப்படுத்தப்பட்டாலும் அந்நாட்டு மக்களின் அடிப்படை தேவைக்கு பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திவால் நிலை
மேலும் துறைமுக வகைக்காக வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியை கட்டியதால் தற்போது இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் உள்ளது. அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு கூட தற்போது இலங்கையிடம் பணம் இல்லை. இலங்கை வட்டியை கட்டுவதற்கே தனது வருமானத்தின் பெரும் பகுதியை பயன்படுத்தியதால் தற்போது திவால் நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
இந்நிலையில் இலங்கையைத் அடுத்து பாகிஸ்தானும் சீனாவிடம் இருந்து மிகப் பெரிய தொகையை கடனாகப் பெற்று இருப்பதால் எதிர்காலத்தில் இலங்கை போல அந்நாட்டிற்கும் சிக்கலான நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு என பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
மேலும் சில நாடுகள்
பெல்ட் அண்ட் ரோடு என்ற திட்டத்தின் பிடியில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் சிக்கியிருப்பதாகவும் இதேபோல் மேலும் சில நாடுகள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.