சீன கடன் வலையில் மாட்டிக்கொண்டு பல நாடுகள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது நாம் அனைவருக்கும் தெரியும், சமீபத்தில் தான் இலங்கை பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுத் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
இதற்கிடையில் சீனா-விடம் அதிகப்படியான கடன் வாங்கிய பங்களாதேஷ்-ம் இந்தப் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் மாட்டிக்கொள்ள உள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் சீனக் கடனில் தத்தளித்து வருவது மட்டும் அல்லாமல் அந்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அந்நாட்டின் நிதிநிலை மற்றும் பாதுகாப்பை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதன் எதிரொலியாகப் பாகிஸ்தான் தற்போது திவாலாகும் நிலையின் விளிம்பில் உள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு துறைகள் கடுமையான பண நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தான் ரயில்வே நிலை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு, இதற்கு முக்கியக் காரணம் எரிபொருள் தட்டுப்பாடு.
அன்னிய செலாவணி கையிருப்பு
பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் அளவில் தான் உள்ளது. இந்த அன்னிய செலாவணி கையிருப்பில் பெரும் தொகை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்குப் போக உள்ளது.
ஐஎம்எப் அமைப்பு
மேலும் ஐஎம்எப் அமைப்பின் நிதியுதவி காலதாமதமாகியிருக்கும் காரணத்தால் கூடுதல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளதால் பாகிஸ்தான் அரசு கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றை வாங்க போதுமான நிதி இல்லாமல் உள்ளது. இதற்கிடையில் மூன்று நாட்களே எரிபொருள் இருப்பு உள்ளதால், பாகிஸ்தான் ரயில்வே தற்போது பெரும் சிக்கலில் உள்ளது.
கச்சா எண்ணெய்
சில நாட்களுக்கு முன்பு, கச்சா எண்ணெய் இருப்பு ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில், பாகிஸ்தான் ரயில்வே அதன் சரக்கு போக்குவரத்து சேவையைக் கட்டுப்படுத்த முடிவு செய்தது. குறிப்பாகக் கராச்சி மற்றும் லாகூர் பகுதியில் இருந்து சரக்குப் போக்குவரத்தை குறைக்க உத்தரவிட்டது.
பாகிஸ்தான் நிதி நிலைமை
ரயில்களை இயக்க போதுமான எரிபொருள் இல்லாது மூலம் ரயில்வே துறையின் நிதி நிலைமை எப்படி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறையிலும் எதாவது ஒரு வகையில் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டு உள்ளது.
சில்லறை பணவீக்கம்
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 24.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நவம்பர் மாதம் 23.8 சதவீதமாக இருந்தது, இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 12.28 சதவீதமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ரயில்வே துறையைப் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கவனிக்காமலும், போதுமான உதவிகள், நிதி ஆதாரம் அளிக்காமல் புறக்கணித்தால், கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனமாக மாறி திவால் நிலையை அறிவிக்க நேரிடும் என்று பாகிஸ்தான் ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.
25 பில்லியன் ரூபாய்
பாகிஸ்தான் ரயில்வே துறையின் நிதி நிலை கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ளது, கடந்த ஓராண்டில் ஓய்வு பெற்ற பல அதிகாரிகள்/அதிகாரிகளுக்குக் கிராஜூவிட்டியாகச் சுமார் 25 பில்லியன் ரூபாய் அளவிலான கடன்களைச் செலுத்த பணம் இல்லாமல் நிலுவை வைத்துள்ளது என அந்நாட்டின் ரயில்வே துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
மொத்த கடன் அளவு
பாகிஸ்தான் நாட்டின் மொத்த கடன் அளவு தற்போது 87.7 பில்லியன் டாலராக உள்ளது, இதில் பெரும் பகுதி சீனாவிடம் இருந்து வந்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) 14 பில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது, உலக வங்கி 18.1 பில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது, பாகிஸ்தானுக்குச் சீனாவின் நிலுவையில் உள்ள கடன் 14.5 பில்லியன் டாலராகும். இதை விட முக்கியமாகச் சீனா வங்கிகள் பல பாகிஸ்தானுக்குத் தனிப்பட்ட முறையில் கடன் கொடுத்துள்ளது.